இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் மறந்து விட்ட ஒரு பிரச்னை குறித்து நீங்கள் நேற்று பேசியதாக ஒரு செய்தியை இன்று முக நூலில் பார்த்தேன்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை அமுல் படுத்துவேன்! -
இதை பார்த்தவுடன் உங்களோடு, உங்கள் அருமை நண்பர் ரஜினி காந்த் அவர்களும் என் நினைவுக்கு வந்தார்கள்!
காரணம் அவரும் உங்களைப் போல் அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்துக் கொண்டிருந்த பொழுது, அதற்கு அவரும் இப்படி அடிக்கடி ஒரு காரணம் சொன்னது உங்களுக்கு நினைவு இருக்கும்!
சிஸ்டம் ரொம்பக் கெட்டுப் போச்சு! அதை முதலில் சரி செய்ய வேண்டும்! – என்று.
இந்த இரண்டு நண்பர்கள் பேச்சுக்கும் நிறைய தொடர்பு உண்டு! நான் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வந்தது! உங்கள் கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்து விட்டு, எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி இப்படி அறிவித்திருந்தீர்கள்!
சீரமைப்போம் தமிழகத்தை! ....... என்ற தலைப்பில் எதிர் காலத்தில் தமிழ் நாட்டை எப்படி சீர் படுத்துவது என்று எங்கள் கருத்துகளைக் கேட்டு ஒரு கட்டுரை எழுதும்படி சொல்லியிருந்தீர்கள்!
நானும் அது தொடர்பான என் கருத்துக்களை ஒரு கட்டுரை வடிவில் தங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு எழுதி அனுப்பி வைத்தேன். அங்கிருந்து என் கட்டுரைக்கு 761 என்றொரு எண் குறிப்பிட்டு, அது பரிசீலனையில் இருப்பதாகவும் அதன் முடிவு விரைவில் தெரியப் படுத்தப் படும் என்று திரு முருகானந்தம் அவர்கள் 18-2-2021 ல் எனக்கு தகவலும் கொடுத்திருந்தார்.
நீங்கள் பூரண மது விலக்கைக் கொண்டு வருவதாகச் சொல்கிறீர்கள்! உங்கள் நண்பர் ரஜினி காந்த் தமிழ் நாட்டில் சிஸ்டம் கெட்டுப் போச்சு என்று சொல்கிறார்! சிஸ்டம் ஏன் கெட்டுப் போச்சு...அதை எப்படி ரிப்பேர் செய்வது... அதன் பின் நாட்டை எப்படி முன்னேற்றுவது என்று விரிவாக அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தேன்!
அந்தக் கட்டுரையை நீங்கள் படித்தீர்களா என்று எனக்குத் தெரியவில்லை! உங்களுக்கு தேர்தல் நேரத்தில் அதற்கு நேரம் இருப்பது அரிது தான்!
அந்த ‘சப்ஸெக்ட்” பற்றி நேற்று நீங்கள் பேசியதால், அந்தக் கட்டுரையை இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் பார்வைக்கும் உங்களை விரும்பும் வாக்காளர்கள் பார்வைக்கும் கொண்டு வருவது சிறப்பு என்று படுகிறது!
கோவையில் தங்கள் கட்சிப் பிரமுகர்கள் பார்வையில் இந்த கட்டுரை பட்டால் இந்தக் கட்டுரையை திரு கமலஹாசன் அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்!
மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராசர் போன்ற இந்திய நாட்டுத் தலைவர்களுக்கு உயிர் மூச்சாக இருந்த மது விலக்கு கொள்கையைத் தொட்டுள்ள திரு கமலஹாசன் அவர்கள், திரு ரஜினி காந்த் சொல்லும் கெட்டுப் போன சிஸ்டத்தை சரி செய்ய மேலும் தீவிரமாக முயற்சி எடுத்து செயல் படுவார் என்று ஆசைப் படுகிறேன்!
சீரமைப்போம் தமிழகத்தை! .......
துடுப்பதி ரகுநாதன்
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிஸ்டம் கெட்டுப் போச்சு என்று சொன்னார்!
அது உண்மை தான்!
திரு ரஜினிகாந்த் அவர்கள் சிஸ்டம் என்று சொன்னது தமிழ் நாட்டின் நீதி, நிர்வாகத்தை!
முதலில் அதை பழுது பார்க்க வேண்டும்! அப்புறம் தான் தமிழகத்தை சீரமைக்க முடியும்! அது அவ்வளவு சுலபமான வேலை அல்ல!
நீதி நிர்வாகம் அதாவது ரஜினிகாந்த் பாஷையில் இந்த சிஸ்டம் ராஜாஜி, காமராசர் காலத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுக் கொண்டே போய் இப்பொழுது பழுது பார்ப்பது மிகவும் கடினம் என்ற நிலைக்கு வந்து விட்டது!
அப்படி கெட்டுப் போனதற்கு என்ன காரணம் என்று முதலில் தெரிந்தால் தானே.. அதை பழுது பார்க்க முடியும்?
இப்பொழுது வரும் அரசியல்வாதிகள் எல்லாம் நின்று போன வாகனத்தை பழுது பார்க்காமல் கலர் கலராக பெயின்ட் அடித்து அலங்காரம் செய்து பயன் படுத்தப் பார்க்கிறார்கள்!
அது சாத்தியப்படாது! தமிழ் நாட்டில் முதலில் சிஸ்டத்தை சரி செய்யாமல் எத்தனை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு திட்டங்கள் போட்டு, அதை அரசு நிறை வேற்றினாலும் ஒரு புண்ணியமும் இல்லே!
சிஸ்டம் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப் போய் கொண்டே இருக்க என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள தமிழ் நாட்டில் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை! இன்னும் சொல்லப் போனால் சிஸ்டம் கெட்டுப் போனதே நம் அரசியல் தலைவர்களுக்குத் தெரியவில்லை!
சிஸ்டம் கெட்டுப் போன காரணத்தை தெரிந்து அதை அகற்ற வேண்டும்! முதலில் அந்தக் காரணத்தை தெரிந்து கொள்வோம்!
இந்திய சுதந்திரம் வாங்கிய பிறகு காந்தி, ராஜாஜி, காமராசர் போன்ற முக்கிய தலைவர்களின் அரிய முயற்சியால் மது விலக்கு தமிழ் நாட்டில் அமுலில் இருந்தது!
அப்பொழுதும் ஒரு கிராமத்திற்கு ஏழு எட்டுப் பேர் திருட்டுத்தனமாக குடித்துக் கொண்டிருந்தார்கள்! அது கிராம ஜனத் தொகையில் 2% தான் இருக்கும்! அந்தக் குடிகாரர்களை தீண்டத்தகாதவர்கள் போல் அந்தக் காலத்தில் நம் குடும்பப் பெண்கள் பார்த்தார்கள்! பொது மக்களும் குடிகாரர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் பொது நிகழ்ச்சியில் அவர்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள்!
மது விலக்கை அகற்றிய பின், காலப் போக்கில் பொது மக்களில் இன்று 70% மக்கள் குடிகாரர்களாக மாறி விட்டார்கள்! இப்பொழுது பெண்களும் ஆண்களுக்கு சரி சமமாகக் குடிக்கிறார்கள்! அந்தக் காலத்தில் எதிரே குடிகாரன் வந்தால் ஒதுங்கிப் போன பெண்கள், இன்று அவர்களும் டாஸ் மாக் கடைகளில் போய் குடிகாரர்களோடு வரிசையில் நின்று வாங்கிக் குடிக்கிறார்கள்!
அது மட்டுமல்ல, பள்ளிக்குப் போகும் மாணவ மாணவிகளும் குடித்து பழகிக் கொண்டு வருகிறார்கள்!
இன்று சமுதாயம் கூட, குடிப்பதை பெரிய குற்றமாகப் பார்ப்பதில்லை! இப்பொழுது மது விலக்கு தேவை என்று சொல்பவர்களை படிக்காத பாமரனைப் போல் பார்க்குமளவுக்கு நம்மை மேற்கத்திய நாகரிகம் மாற்றி வருகிறது! அரசும் தன் வருமானத்தை பெருக்க மது விற்பனை தான் சிறந்த வழி என்று நினைக்கத் தொடங்கி விட்டது!
தமிழ் நாட்டை சீரமைப்போம் என்று சொல்லும் சிந்தனையாளர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை சற்று மறந்து விட்டு, தமிழ் நாட்டில் இன்று சட்டம் ஒழுங்கு, நீதி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பார்க்க வேண்டும்!
மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் பல தேவைகள் இருக்கும்!.. மனிதனுக்கு முக்கிய தேவை உண்ண உணவு....உடுக்க உடை...இருக்க இருப்பிடம் இந்த மூன்றும் தான் முக்கிய தேவைகள்....என்று எல்லோருக்கும் தெரியும்... இந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள சாதாரணமாக எந்த மனிதர்களும் கொடிய குற்றங்கள் எதுவும் செய்து விட மாட்டார்கள்!
ஆனால் குடிக்க காசு தேவை என்பது மற்ற தேவைகளை விட ரொம்ப வித்தியாசமான தேவை! அதைப் பற்றிய அறிவும், அனுபவமும் மேட்டுக்குடி மக்களுக்கு இருக்காது!
இன்று டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக அரசுக்கு 80% வருமானத்தை ஈட்டித் தருபவர்கள் ஏழை பாட்டாளிகள், தொழிலாளிகள், தினசரி கூலிகள் தான்! அவர்கள் வீட்டில் வாழும் பெண்கள்தான் இந்த குடித் தேவைக்காக அவர்கள் புருஷனும், பெற்ற மகன்களும் துணிந்து செய்யும் அக்கிரமத்தை அன்றாடம் பார்த்துக் கொண்டு இருக்கிறாங்க!.. குடிக்கு அடிமையான குடிகாரனுக்கு தாய், தங்கை, தாரம், குழந்தை என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது!,,
குடி வெறி வந்தா அந்த குடிகாரர்கள் எதற்கும் அஞ்சமாட்டாங்க... குடிக்கு பணம் தேவைப் படும் பொழுது அதற்காக பஞ்சமா பாதகங்களும் செய்வாங்க!...
தேவையானா பொண்டாட்டியைக் கூட அடுத்தவனுக்கு கூட்டிக் கொடுப்பாங்க!..... ஏன் கொலையும் கூட செய்வாங்க!... அவர்கள்... தேவையை நிறைவேற்றிக் கொள்ள யார் தலையிலும் வேண்டுமானாலும் கல்லைத் தூக்கிப் போடுவாங்க!....
மொத்தத்தில் தமிழ் நாட்டில் ஏழை எளிய குடும்பத்து பெண்கள் சந்தோஷத்தை மறந்து பல காலம் ஆச்சு!...
டாஸ் மாக் கடைகளுக்கு வருமானத்தில் 20% த்தை ஈட்டித் தருபவர்கள்,அரசு ஊழியர்கள், பல்வேறு தனியார் அலுவலக ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள் போன்றவர்கள்!
பள்ளிக்கூட ஆசிரியர்கள் முதல் கல்வித்துறை உயர் அதிகாரி வரை, கிராம அலுவலரிலிருந்து கலெக்டர் ஆபிஸ் உயர் அதிகாரி வரை, காவல் துறையிலிருந்து பத்திரப் பதிவு அலுவலர் வரை உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இதில் அடங்குவார்கள்!
குடிக்கு அடிமையான அரசு உயர் அதிகாரிகள் அதோடு நிற்பதில்லை! இரவு நேரங்களில் குடித்து விட்டு தினசரி ஜாலியாக பொழுதை போக்க விரும்புகிறாங்க!... அதற்கு அவர்களுக்கு நிறைய பணம் தேவைப் படும்! ஜாலி\யாக இரவுப் பொழுதுகளை ‘கிளப்’களில் கழிக்க அவர்களுக்கு எத்தனை சம்பளம் கொடுத்தாலும் பத்தாது! அவர்கள் சம்பளம் எல்லாம் ஒரு வார செலவுக்குக் கூட காணாது!...
அவர்கள் எப்படியாவது தினசரி குடிப்பதற்கும், இரவு நேரத்தை ஜாலியாகப் போக்குவதற்கும் பணத்தை தேடித்தான் தீர வேண்டும்!
குடிக்க பணம் தேவை என்று வரும் பொழுது எல்லாக் குடிகாரர்களும் அவர்கள் தாங்கள் செய்யும் தொழிலிருந்து தான் அந்தப் பணத்தைத் தேட முயற்சி செய்வாங்க!.. இது உலக இயற்கை!
இந்த இடத்தில் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்க!...
எல்லா அரசு அலுவலங்களில் பணியில் இருக்கும் எழுத்தர் முதல் உயர் அதிகாரிகள் வரை அவரவர் சக்திக்கு ஏற்ப லஞ்சம் வாங்கி தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வார்கள். அரசியல் வாதிகள் ஊழல் செய்து பணத்தை திரட்டிக் கொள்வார்கள்!
அரசு அலுவலர்கள் என்றால் லஞ்சம் வாங்குவதும், அரசியல்வாதிகள் என்றால் ஊழல் செய்வதும் சகஜம் என்ற மனோ நிலைக்கு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்!
அது மட்டுமல்ல, அவர்கள் கொள்ளையடிப்பதில் தங்களுக்கும் இலவசம் என்ற பெயரில் கொஞ்சம் பங்கு தந்தால் போதும் என்ற கேவலமான சிந்தனைக்கும் பொது மக்கள் வரத் தொடங்கி விட்டார்கள்!
அதனால் தான் தமிழ் நாட்டில் நீதி, நிர்வாகம் எல்லாம் காமராசர் காலத்திற்குப் பிறகு சீர் கெட்டுப் போய் விட்டது!..
நீதித் துறையில் இருக்கும் பல ஊழியர்களையும் இப்பொழுது டாஸ் மாக் கடைகளில் பார்க்க முடிகிறது! அங்கும் அது பரவ பரவ நீதித் துறையும் சீர் கெட்டுப் போய் விடும்!
இளைய தலைமுறை மாணவ மாணவிகள் பிஞ்சிலேயே பழுத்து நாசமாகப் போய் கொண்டிருக்கிறார்கள்! கல்வியின் பயனும் நாசமாகி விடும்!
காவல் துறையில் இருக்கும் அதிகாரிகள் பலர் குடிகாரர்களாக மாறும் பொழுது, அவர்களிடம் அதிகாரமும் ஆயுதங்களும் கைகளில் இருப்பதால் என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது! கொலைகள் நடக்கலாம்! கொலைகளுக்கு உடந்தையாகவும் இருக்கலாம்! நாட்டில் எது நடந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!
மொத்தத்தில் தமிழ் நாட்டில் நீதி நிர்வாகம் எல்லாம் சீர் கெட்டுப் போவதற்கு அடிப்படைக் காரணம் இந்த குடி தான்!
குடிக்கு அடிமையாகும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நம் நாட்டில் இன்று பெருகிக் கொண்டே போகிறார்கள்! ஆட்சிக்கு வரும் எந்த அரசியல் தலைவர்களும் இதை கண்டு கொள்வதில்லை!
அந்தக் கால அரசியல் தலைவர்களுக்கு இந்த மதுவால் ஒரு பைசா ஆதாயம் இல்லை! அது மட்டுமல்ல, அவர்கள் மதுவின் தீமைகளை நன்கு தெரிந்த வாழ்ந்தவங்க!...
அந்தக் காலத்தில் காந்தி, ராஜாஜி. காமராசர் போன்ற பெரும் தலைவர்கள் மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினாங்க!
ஆனால் இந்தக் காலத்து எல்லா அரசியல்வாதிகளுக்கும் வருமானத்தின் ஊற்றுக் கண் இன்று இந்த மது தான்!
திரு ரஜினி காந்த் சொல்வது போல் சிஸ்டம் ரொம்ப கெட்டுப் போச்சு! சிஸ்டத்தை சரி செய்ய வேண்டுமானால் முதலில் மது விலக்கை அமுல் படுத்தித் தான் தமிழகத்தை சீரமைக்கும் முயற்சில் ஈடுபட வேண்டும்!
பூரண மது விலக்கை அமுல் படுத்தக் கூடிய துணிச்சலான அரசியல் தலைவர்கள் தமிழ் நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை! நம் அரசியல் தலைவர்கள் கோடீஸ்வர தொழிலதிபர்களோடு சேர்ந்து கொண்டு “உலகம் முழுவதும் தான் குடிக்கிறாங்க!” என்று சாதாரணமாக சொல்லி தப்பித்துக் கொண்டு போய் விடுவாங்க!
சிஸ்டத்தை சரி செய்ய வேண்டுமானால் முதலில் மது விலக்கை அமுல் படுத்தித் தான் தமிழகத்தை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்!
பூரண மது விலக்கை அமுல் படுத்தும் பொழுது, ஏழை எளிய பாட்டாளி, தொழிலாளி, தினசரி கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் 80% தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உய\ரும்! அவர்களின் குழந்தைகளுக்கும் எதிர் காலம் நல்லபடியாக அமையும்!
அதனால் நம் நாட்டில் வாழும் 80% ஏழை எளிய குடும்பப் பெண்கள் உங்களுக்கு நன்றியோடு ஆதரவாக இருப்பார்கள்!
தமிழ் நாட்டை சீரமைக்கும் பணி என்று எடுத்துக் கொண்டால் முதலில் கவனிக்க வேண்டியது
கடந்த காலத்தில் தமிழ் நாட்டில் சில அரசியல் தலைவர்கள் தங்கள் சுய முன்னேற்றத்திற்காக இளைய சமுதாயத்தை மாணவப் பருவத்திலேயே கீழ்கண்ட நான்கு வெறிகளையூட்டி நாசப் படுத்தி வைத்திருக்கிறார்கள்!
1. குடி வெறி 2. மத வெறி 3. ஜாதி வெறி 4. கட்சி வெறி தமிழ் நாடு முன்னேற வேண்டுமானால் முதலில் இந்த நான்கு வெறிகளையும் ஒழிக்க வேண்டும்!
பிறந்த குழந்தைகள் வாலிப பருவத்திற்கு வருவதற்குள் இந்த நான்கு வெறியில் ஏதாவது ஒரு வெறியை இளைஞனுக்கு பிடிக்க வைத்து விடுகிறார்கள்!
முதல் வெறி! இடுப்பில் வேட்டி கூட இல்லாமல் தெருவில் கிடக்கும் குடிகாரர்களின் குடி வெறி! குடித்து விட்டு தன் பெற்ற மகளிடமே தவறாக நடந்த தந்தை பற்றியெல்லாம் பத்திரிகையில் செய்தி வருகிறது! குடியால் வரும் கேடு இதை விட இனி மோசமாகப் போக முடியாது!
அடுத்து மத வெறி!
ஒரு மதத்தைச் சேர்ந்தவன், மற்ற மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு எங்கேயாவது போய் பிழைத்துக் கொண்டிருப்பான். அவர்களைத் தேடிப் பிடித்து, மத வெறி கும்பல்கள் நடு ரோட்டிலேயே அவர்களை கசாப்பு கடையில் ஆடு வெட்டுவது போல் வெட்டி வீசிப் விட்டுப் போகிறாங்க!....
அடுத்து இந்த ஜாதி வெறி!
ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை அந்த மாநிலத்தில் தாழ்த்தப் பட்ட ஜாதியினர் என்று ஒதுக்கி வைத்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை பறித்து விடுவது!... அவர்கள் உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தால், அந்த ஊரையே தீ வைத்து கொளுத்துவது....
இப்பொழுது கடைசியாகத் தோன்றியிருப்பது இந்த கட்சி வெறி!
இந்தப் புதிய வெறி மற்ற பழைய வெறிகளை விட ரொம்ப மோசமான வெறியாக இருக்கிறது!..ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் ஒரு கட்சியை ஆரம்பித்து இளைய சமுதாயத்தை ஜாதி வெறி பிடித்து அலைய விடுகிறார்கள்!
இந்த நான்கு வெறிகளையும் தமிழ் நாட்டில் இருந்து முதலில் அகற்றப்பட வேண்டும்!
அடுத்து கவனிக்க வேண்டியது, நம் கல்வி முறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
இன்று இளைய தலைமுறை மாணவ மாணவிகளிடம் ஒழுக்கம் குறைந்து கொண்டே வருகிறது!
அதற்குக் காரணம் இன்றைய ஆங்கில வழி கல்வியில் குழந்தைகளுக்கு ஒழுக்கத்திற்கும் தமிழ் பண்பாட்டிற்கும், எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை! வெறும் வேலை வாய்ப்புக்கான கல்வியாக மட்டுமே அது இருக்கிறது!
அந்தக் கால நம் தமிழ் கல்வியில் ஒரு மாணவன் பத்து வயசுக்குள் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நீதி வெண்பா எல்லாம் படித்து தேறியிருப்பான்! பதினைந்து வயசுக்குள், திருக்குறள், நாலடியார், இனியவை நாற்பது, இன்னா நாற்பது எல்லாம் படித்துப் புரிந்திருப்பான்.
அவன் பெரியவன் ஆனதும் ஒழுக்கத்தை உயிரை விட மேலாக நினைத்து, தன் கடமைகளை புரிந்து வாழத் தொடங்குவான். அதனால் அவன் வாழ்க்கை முழுவதும் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கும்!
நம் தமிழ் வழி கல்வியில் ஒழுக்கத்திற்குத் தான் முதல் இடம் கொடுக்கப் பட்டிருக்கும்! மனிதனுக்கு முதல் தேவை ஒழுக்கம் என்று எல்லா தமிழ் நீதி நூல்கள் போதிக்கின்றன
அவன் பெரியவன் ஆனதும் ஒழுக்கத்தை உயிரை விட மேலாக நினைத்து, தன் கடமைகளை புரிந்து வாழத் தொடங்குவான். அவன் வாழ்க்கையும் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கும்!
அதனால் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி தமிழ் பண்பாட்டை ஒட்டி, ஒழுக்கத்தைப் போற்றும் தமிழ் கல்வியாக இருக்கும்படி கல்வியில் முதலில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்!
நம் இலட்சியம் தமிழகத்தை சீரமைப்பது தானே?
அப்படியானால் முதலில் அரசு மக்கள் மத்தியில் வியாபாரம் செய்ய ஒரு போதும் ஆசைப் படக் கூடாது!
மக்களின் தேவை அறிந்து சேவை செய்வது தான் அரசின் கடமை!
மக்களின் முதல் தேவை விவசாயத் தொழிலில் இருக்கும் விவசாயிகளுக்கு நீர் பாசனத்தில் இருந்து அனைத்து வசதிகளையும், அவ்வப்பொழுது அரசு செய்து தர வேண்டும்!
பொது மக்கள் அனைவருக்கும் நல்ல மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எல்லா வகை கல்விக் கூடங்களை பெருக்கி, ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் இலவசமாக கல்வி கற்றுக் கொள்ளும் படி அரசு திட்டங்கள் அமைய வேண்டும்.
பொது மக்களின் போக்கு வரத்துக்கு தேவையான சாலை வசதிகள், வாகன வசதிகள் செய்து தர வேண்டும்
சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும். ஊழலில் ஈடுபடும் அரசியல் வாதிகளையும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் உடனே தண்டிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கையும் அரசு நிலை நாட்ட வேண்டும்.
அரசு எந்தத் திட்டம் போட்டாலும் அது மக்கள் முன்னேற்றத்திற்கான சேவை மனப்பான்மையில் இருக்க வேண்டும்!
எதிர் காலத்தில் ஒரு நல்ல அரசியல்வாதியின் கைகளில் ஆட்சி வந்து மேலே சொன்னபடி நடந்தால், எதிர் காலத்தில் தமிழகம் சீரமைக்கம்பட்டு உலகிற்கே ஒரு எடுத்துக் காட்டாகத் திகழும்!
AthibAn Tv