
தன்குழந்தைகள் மூலம் தன் உடலில் அரை நிர்வாண ஓவியம் வரைந்த குற்றத்திற்காக ரெஹனா பாத்திமா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்தவர் ரெஹானாபாத்திமா.பெண் உரிமைகளுக்காக போராடுவதாக கூறி கொள்ளும் இவர் தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் பரபரப்பை உருவாக்கி உள்ளார். சபரி மலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியதை தொடர்ந்து சபரி மலைக்கு செல்ல முயன்று சர்ச்சையை உருவாக்கினார். இப்பிரச்னைக்காக 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இது போல பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தி பரபரப்பை உருவாக்கி வருகிறார்.
தற்போது தன் இரண்டு (மகன், மகள்) குழந்தைகளை கொண்டு தன்னுடைய அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து அதனை வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து உள்ளூர் பாஜ பிரமுகரின் புகாரை அடுத்து பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா போலீசார் பாலியல் ரீதியாக வெளிப்படையாக உள்ளடக்கத்தை மின்னணு முறையில் பரப்புதல் மற்றும் குழந்தைகள் நீதிச்சட்டம் 75 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில் வீடியோ எப்படி, ஏன் பதிவேற்றப்பட்டது என்பதை நாங்கள் விசாரித்து கொண்டிருக்கிறோம் என கூறினர்.
இதனிடையே வீடியோ குறித்து ரெஹனா பாத்திமா கூறி இருப்பதாவது:குழந்தைகளுக்கு பாலியல் பற்றி தங்கள் வீட்டில் கற்பிக்கப்பட்டால் மட்டுமே சமுதாயத்தை மாற்ற முடியும்" என கூறிய அவர் கண் தொற்று காரணமாக ஓய்வெடுக்கும் போது தனது குழந்தைகள் தனது உடலில் வண்ணம் தீட்டத் தொடங்கியதாகவும், அழகு பார்ப்பவரின் கண்ணில் இருப்பது போலவே, பார்ப்பவரின் கண்களிலும் ஆபாசமும் இருக்கிறது, ”என்று கூறி உள்ளார்.