'ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி, 'ரபேல்' ரக போர் விமானங்கள் ஒப்படைக்கப்படும். கொரோனா வைரஸ் பாதிப்பால், எந்தத் தாமதமும் ஏற்படாது' என, ஐரோப்பிய நாடான பிரான்சின் இந்தியாவுக்கான துாதர் இமானுவல் லெனென் கூறியுள்ளார்.
நம் விமானப் படைக்கு, பிரான்சிடமிருந்து, 36, ரபேல் ரக போர் விமானங்களை, 58 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க, 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, முதல் விமானம், கடந்தாண்டு அக்டோபரில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, கொரோனா வைரஸ் பரவலால், பிரான்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், குறிப்பிட்ட காலத்தில், மீதமுள்ள விமானங்கள் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, இந்தியாவுக்கான பிரான்ஸ் துாதர் இமானுவல் லெனென் கூறியதாவது: வைரஸ் பாதிப்பால், ரபேல் போர் விமானங்களை ஒப்படைப்பதில் எந்தத் தாமதமும் ஏற்படாது. கடந்த மாத இறுதியில் கூட, ஒரு விமானம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விமானங்களை, இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விமானங்களும், ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட காலத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
AthibAn Tv