ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகரங்களை உருவாக்கும் மசோதாவுக்கு அம்மாநில கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆந்திராவில் தற்போது அமராவதி தலைநகரமாக விளங்குகிறது. இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றதும், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் இருக்கும் என்று அறிவித்தார். அதன்படி, அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும் (தலைமைச் செயலகம்), கர்னூலை நீதித்துறைத் தலைநகராகவும் (உயர் நீதிமன்றம்) உருவாக்கி, மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சம வளர்ச்சி அடைவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்தார்.
இதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. வெவ்வேறு தலைநகரங்கள் அமைவதால் ஒவ்வொன்றுக்கும் மக்களை ஒவ்வோரு இடத்துக்கு அலைக்கழிக்கும் வேலை இது எனக்கூறி தெலுங்கு தேசம் எதிர்த்தது.
இந்நிலையில், இந்த மூன்று தலைநகர் மசோதா சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. தற்போது ஆந்திர மாநில கவர்னர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து 3 தலைநகர் நிர்வாகப் பணிகளை இனி ஆந்திர அரசு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AthibAn Tv