'என்னை சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், அடுத்த அதிபராக, ஜோ பிடன் வருவதற்கு வாய்ப்புள்ளது' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், விரக்தியில் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டி இடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார்.சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், ஜோ பிடனுக்கு ஆதரவாக உள்ளன. மற்றொரு கருத்துக் கணிப்பில், 'மக்கள் செல்வாக்கை, டிரம்ப் இழந்து வருகிறார்' என, தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், 'பாக்ஸ் நியூஸ்' என்ற 'டிவி சேனலுக்கு' அளித்துள்ள பேட்டியில், டிரம்ப் கூறியுள்ளதாவது: ஜோ பிடனால், இரண்டு வார்த்தைகளைகூட சேர்த்து பேச முடியாது. ஆனால், அவர் உங்களுடைய அடுத்த அதிபராக உள்ளார். ஏனென்றால், சிலருக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதனால், இது ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நான் என்னுடைய பணிகளை, கடமையை தொடர்ந்து செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, 'அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழக்கமாக, ஜனநாயகக் கட்சிக்கே ஆதரவாக இருப்பர். ஆனால், தற்போது, 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள், டிரம்புக்கு ஆதரவாக உள்ளனர்' என, ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
'அதிபர் டிரம்புக்கு, இந்தியர்கள் மற்றும் லட்சக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு உள்ளது. அதற்காக, அவர் தன் நன்றியை தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பை அவர் எப்போதும் பாராட்டத் தவறியதில்லை' என, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், சாரா மேத்யூஸ் கூறியுள்ளார்.
10 ஆண்டு சிறை:
ஆப்ரிக்க அமெரிக்கர், ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. அப்போது, பல தலைவர்களின் சிலைகள், நினைவிடங்கள், வரலாற்று சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டன மற்றும் அவமதிக்கப்பட்டன. அதையடுத்து, சிலைகள், நினைவிடங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய உத்தரவில், டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 'சேதப்படுத்துவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்' என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
AthibAn Tv