Type Here to Get Search Results !

ஈரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயார்... மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது

 ஈரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. ஈரான் ஒருபோதும் இஸ்ரேலை நேரடியாக தாக்கவில்லை. லெபனான், சிரியா போன்ற நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்கி வருகிறது. அந்த ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலைத் தாக்குகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே, காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதல் நடத்தியது. ஈரான் ஆதரவு ஹமாஸ் போராளிக் குழு நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணயக்கைதிகளாக காசாவுக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக் குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை மீட்டது. மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.

அதே நேரத்தில், ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில், காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழு உட்பட 33 ஆயிரத்து 797 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் மேற்குக் கரையில் நடந்த மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சி ராணுவத்தின் மூத்த தளபதி முகமது ரிசா சாகிடி, 6 ஈரான் புரட்சி ராணுவ வீரர்கள், 6 சிரியர்கள் என மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியது.

இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலை ஈரான் நேரடியாக தாக்குவது இதுவே முதல் முறை. ஈரான் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 170 ட்ரோன்கள் மற்றும் 30 கப்பல் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது.

இருப்பினும், ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. மேலும் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவப்பட்ட சில ஏவுகணைகளை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜோர்டான் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் சுட்டு வீழ்த்தின.

எவ்வாறாயினும், ஈரான் நடத்திய தாக்குதலில் தெற்கில் உள்ள விமானப்படை தளத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டதாகவும், தாக்குதலில் 7 வயது சிறுமி லேசான காயம் அடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எனினும், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடி தாக்குதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஈரான் மீதான தாக்குதலை தாமதப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஈரானின் அணு உலைகள் மற்றும் ஆயுத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று சிரியா மற்றும் லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையாக தாக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

அதேநேரம், விரைவில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom