பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மான் என் மக்கள் என்ற யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியான திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
இதில் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதால், இதற்கான பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.
தமிழகமே வியக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டத்தை மிகப் பெரிய அளவில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. மாதப்பூர் கிராமத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை பாஜக நடத்திய மிகப்பெரிய பொதுக்கூட்டம் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்காக இன்று மதியம் 2 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை சூலூர் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். தொடர்ந்து பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதற்காக தாமரை வடிவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அங்கிருந்து மதுரை செல்கிறார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் மோடி, இன்று இரவு மதுரையில் தங்குகிறார்.
தமிழக பாஜக நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை தூத்துக்குடி வருகிறார். தொடர்ந்து நெல்லையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து கேரளா செல்கிறார்.
பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திருப்பூரில் முதலில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதால் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரின் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரையில் இன்றும் நாளையும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
AthibAn Tv