சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் கொரோனா, சுவாசப் பிரச்சனை காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் சிலர் அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
நெல்லை போஸ்டர் ஒட்டியதாக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணியராஜா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல் திருச்சி புறநகர் மாவட்டம் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி புலியூர் இரா.அண்ணாதுரையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் பண்ணை சின்னராஜா, மாவட்ட இளைஞர் பாசறைத் தலைவர் ஏ.புதுராஜா ஆகியோர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதில், தமிழ்நாட்டை வழி நடத்த வரும் அதிமுக பொதுச் செயலாளர் தியாகத்தின் மறு உருவம் எங்களின் ராஜமாதாவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில் எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, நடராஜன், தினகரன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்தும் கட்சி நிர்வாகிகள் பொருட்படுத்தாதது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
AthibAn Tv