'அமைதி பேச்சு நடத்த இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக, பாகிஸ்தான் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை' என, நம் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், காஷ்மீர் உட்பட, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், 'அமைதி பேச்சு நடத்த ஆர்வமாக இருப்பதாக இந்தியா செய்தி அனுப்பியுள்ளது' என, குறிப்பிட்டார்.
இது குறித்து, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது: பாக்., அதிகாரி கூறியுள்ளதுபோல், அமைதி பேச்சு நடந்த, இந்தியா எந்த அழைப்பும் விடுக்க வில்லை; அவர் கூறியதில் எந்த உண்மையும் இல்லை. நம் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக அவர் பேசியுள்ளதற்கு, கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
பாகிஸ்தானில் உள்ள அரசு, உள்நாட்டு பிரச்னைகளால் திண்டாடுகிறது. அதை மறைக்கவும், சர்வதேச நாடுகளை திசை திருப்பவும், இதுபோன்ற பொய்களை அவிழ்த்து விடுவது வாடிக்கை.இவ்வாறு, அவர் கூறினார்.