ராமர் கோவில் பூமி பூஜை நடத்தப்பட்டபின், அயோத்தியில், நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது; ரியல் எஸ்டேட் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்து, தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ராமர் கோவில் கட்ட, 'ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளையை, மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் அமைத்தது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, கடந்த மாதம், 5ம் தேதி நடந்தது. பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று, கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்நிலையில், தீர்ப்புக்குப்பின் அயோத்தியில் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வந்த நிலையில், பூமி பூஜைக்குப்பின், மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம், அயோத்தியில் விரைவில் பெரிய ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம் போன்ற சர்வதேச தரத்திலான வசதிகள் வர உள்ளதே ஆகும். இதனால் அயோத்தியில், ஏராளமானோர் நிலத்தை வாங்கி வருகின்றனர். அயோத்தி தீர்ப்புக்குப்பின் 40 சதவீதம் நிலத்தின் மதிப்பு அதிகரித்த நிலையில், பூமி பூஜைக்குப்பின் பின், 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
அயோத்தி புறநகர் பகுதியில், கடந்த ஆண்டு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்பட்ட ஒரு சதுர அடி நிலத்தின் விலை, தற்போது ரூ.1000 வரை விற்கப்படுகிறது. அயோத்தி தீர்ப்புக்கு முன் அயோத்தி நகர் பகுதியில், சதுர அடி ரூ.1000க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
AthibAn Tv