காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாட்டின்போது, இலங்கை அரசுடனான உறவுக்கு இந்தியா சிறப்பு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.
இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு பிரதமர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
உச்சி மாநாட்டில் மோடி பேசியதாவது: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் (இலங்கை பிரதமர் ராஜபக்சே) கட்சி வெற்றி பெற்று, தாங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். எனது அழைப்பை ஏற்று இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றி.
இந்தியா - இலங்கை இடையேயான உறவுகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் படியும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் எங்கள் அரசு, இலங்கை அரசுடனான உறவுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்சே, ‛கொரோனா தொற்று சூழலில், பிற நாடுகளுக்காகவும் இந்தியா செயலாற்றியதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எம்.டி நியூ டைமண்ட் கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பெரும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்பாக அமைந்தது,' எனப் பேசினார்.
AthibAn Tv