பொய்யான செய்திகளை விட கட்டணம் அளித்து வெளியிடப்படும் செய்திகள் ஆபத்தானவை என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பு சார்பில் காணொலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டு பேசியதாவது: பொய்யான செய்திகளுக்கும் கட்டணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திக்கும் பெரிய வித்தியாசமில்லை. பொய்யான செய்திகளை விட கட்டணம் அளித்து வெளியிடப்படும் செய்திகளே அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. பொய்யான செய்திகள் சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும். இத்தகைய பொய்யான செய்திகளை கையாளுவதில் சிக்கல் ஏற்படுவதால் சாமானிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பல்வேறு நாடுகள் பொய்யான செய்திகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. பொய்யான செய்திகளின் அச்சுறுத்தலை குறைக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. பொய்யான செய்திகள் பகிரப்படுவதில் சுயக்கட்டுப்பாடு அவசியம். இல்லையெனில் பொய்யான செய்திகளை பொறுத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இது அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளையுமே பாதிக்கும்.
செய்தித்தாள்களில் வரும் செய்திகளை விட வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட செய்திகளையே மக்கள் நம்புகின்றனர். அதுவே மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இணையத்தில் வலம் வரும் பொய்யான செய்திகளை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்த உண்மையை பரிசோதனை செய்து தகவலை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த குழு இயங்கி வருகிறது. விரைவில் இந்த குழுக்கள் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
AthibAn Tv