தங்கக் கடத்தல் விவகாரம் பற்றி, சட்டசபையில் பதில் அளிப்பதை, கேரள முதல்வர் பினராயி விஜயன் தவிர்த்து விட்டார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில், முதல்வருக்கு தொடர்பு உள்ளதாக, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில், கேரள சட்டசபை கடந்த, 24ம் தேதி கூடியது. இதில், அரசு மீது, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
இதையடுத்து, சட்டசபையில், பல்வேறு பிரச்னைகள் பற்றி பேசிய முதல்வர் பினராயி விஜயன், தங்கக் கடந்தல் விவகாரம் பற்றி எதுவும் கூறாமல் தவிர்த்து விட்டார்.இதற்கிடையே, தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக, முதல்வரின் முன்னாள் செயலருக்கு நெருக்கமானவராக கருதப்படும், முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி அருண் பாலசந்திரன், சுங்கத்துறை அதிகாரிகள் முன் நேற்று ஆஜரானார்.அருண் பாலச்சந்திரன் தான், தங்கக் கடத்தலுக்கு வசதியாக, ஸ்வப்னாவுக்கு, தலைமைச் செயலகத்துக்கு அருகே, வீடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.