ரியல் எஸ்டேட் துறையில் தேவையை அதிகரிக்க, முத்திரைத் தாள் கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா அரசு தங்கள் மாநிலங்களில் சொத்து விற்பனைகளுக்கான முத்திரைத் தாள் கட்டணத்தை குறைத்துள்ளது. நகர்புறங்களில் 5% ஆகவும், ஊரகப்பகுதிகளில் 4% ஆகவும் இருந்த கட்டணத்தை டிச., 31 வரை 3% ஆக குறைத்து அறிவித்தது. மஹா., அரசின் இம்முடிவை பாராட்டியுள்ள மத்திய வீட்டு வசதி அமைச்சக செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா, மற்ற மாநிலங்களும் இதை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொழில்துறை அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியதாவது: அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையை பில்டர்கள் குறைக்க ஏதுவாக வருமான வரி சட்டத்தில் மாற்றம் தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சகம் ஆராயும். பாதியில் நின்றுபோன வீட்டு வசதி திட்டங்களை முடிக்க ஒதுக்கப்பட்ட ரூ.25,000 கோடியிலிருந்து முதலீட்டுக்கு இதுவரை ரூ.9,300 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
முத்திரைத் தாள் கட்டணத்தை குறைக்க அனைத்து மாநிலங்களுக்கும் நாங்கள் அறிவுரை வழங்கியிருந்தோம். அதனை மஹா., அரசு செயல்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களிடமும் தொடர்ந்து வலியுறுத்துவோம். இது செலவுக் குறைப்பில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ரியல் எஸ்டேட் தொழிலை எளிதாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கட்டுமான அனுமதி ஆன்லைனில் வழங்கப்படுகின்றன.
மாதிரி குத்தகை சட்டம் 2019-ஐ அரசு இறுதி செய்துள்ளது. வரைவு சட்டத்துடன் ஒப்பிடும் போது இது மேலும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் ஒப்புதல் பெறப்பட்டு மாநிலங்களில் அமலாகும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான மலிவு விலை வாடகை வீட்டு வளாகங்கள் திட்டம், வாடகை வீடுகளுக்கான சந்தையை உருவாக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.
AthibAn Tv