நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்தார்.
அவசர சட்டம்
நாடு முழுதும், 1,482 நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில், 8.6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின், 4.85 லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' உள்ளது. இவற்றின் நிர்வாகம், அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீப காலமாக, பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடந்தது. இதனால், அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள், தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்து, சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.இந்த அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கவும், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு இல்லை
அதேநேரத்தில், மாநில அரசுகளின் கூட்டுறவு சட்டத்தின் கீழ் இயங்கும் மாநில பதிவாளர் கூட்டுறவு சங்கத்தின் அதிகாரத்துக்கு, இந்த சட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், பி.ஏ.சி.எஸ்., எனப்படும், விவசாய முதன்மை கடன் சங்கத்துக்கு, இந்த சட்டம் பொருந்தது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
AthibAn Tv