எஸ்.எஸ்.ஐ.யுடன் தகராறில் ஈடுபட்டு எட்டி உதைத்த 'மாஜி' எம்.பி. அர்ஜுனன்(77) மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் நல்லகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் 77. தர்மபுரி தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி.யான இவர் பல்வேறு கட்சிகள் தாவி தற்போது அ.தி.மு.க.வில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு அர்ஜுனன் காரில் ஓமலுாரில் இருந்து சேலம் கிளம்பினார்.
ஓமலுார் சுங்கச்சாவடி அருகே எஸ்.எஸ்.ஐ. ரமேஷ், பட்டாலியன் போலீஸ் தேசிங் ஆகியோர் அர்ஜுனன் காரை நிறுத்தினர். தேசிங் 'இ - பாஸ்' கேட்க 'நான் யார் தெரியுமா முன்னாள் எம்.பி.' என அர்ஜூனன் தெரிவித்துள்ளார். 'அப்படியெனில் அடையாள அட்டையை காட்டுங்கள்' என தேசிங் கேட்க, டென்ஷன் ஆன அர்ஜுனன் 'யாரிடம் அடையாள அட்டை கேட்கிறீர்கள்' எனக் கூறி போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
எஸ்.எஸ்.ஐ. ரமேஷை எட்டி உதைத்தார். இந்த சம்பவங்களின் வீடியோ காட்சிகள் 'வாட்ஸ் ஆப் பேஸ்புக்'கில் பரவின. எஸ்.எஸ்.ஐ. ரமேஷ் புகார்படி அர்ஜுனன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
AthibAn Tv