இந்தியா - பூடான் இடையே, 600 மெகா வாட் திறனுள்ள புதிய நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது.
நம் அண்டை நாடான பூடானின் டிரசியாங்ஸ்தே மாவட்டத்தில், கொலேன்சுலு ஆற்றின் நீரைப் பயன்படுத்தி, 600 மெகா வாட் திறனுள்ள நீர் மின் திட்டத்தை துவக்க, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இதற்கான முறையான ஒப்பந்தம், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பூடான் வெளியுறவு அமைச்சர் டாண்டி டோர்ஜி ஆகியோர் முன்நிலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று கையெழுத்தானது.
கொலேன்சுலு ஹைட்ரோ எலெக்ட்ரிக் லிட்., என்ற நிறுவனம், இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. வரும், 2025ம் ஆண்டின் மத்தியில், இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவு பலப்படும்இதையடுத்து, இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது; அதில், 'இந்தியா - பூடான் நாடுகளுக்கு இடையேயான நட்புறவில், இந்த நீர் மின் திட்டம், ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும். 'இதன் வாயிலாக, இரு நாடுகளின் உறவு, மேலும் பலப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
AthibAn Tv