
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் மேலும் எவ்வளவு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது என்பதை முடிவு செய்ய மருத்துவ நிபுணர் குழுவினருடன் இன்று(ஜூன் 29) முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார்.
ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை முதல்வர் அறிவித்தார். அதன்பின் மதுரை, தேனி மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு நாளை நிறைவடைய உள்ள நிலையில் நோய் பரவல் இன்னமும் குறையவில்லை.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டம் முடிந்த பின் ஊரடங்கு குறித்து அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.