விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டத்துக்கு முன் மேற்கொள்ளவிருந்த பரிசோதனை திட்டம், சற்று தாமதமாகலாம் என, கூறப்படுகிறது.
'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 2022ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, ககன்யான் என பெயரிடப்பட்டுள்ளது.அதற்கு முன், மனிதர்கள் இல்லாமல், இரண்டு பரிசோதனை விண்கலங்களை அனுப்ப திட்டமிடப்பட்டது. அதில் முதல் விண்கலம், இந்தாண்டு டிசம்பரிலும், அடுத்த விண்கலம், அடுத்தாண்டு, ஜூலையிலும் அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் முதல் விண்கலத்தில், 'வியோம்மித்ரா' என்ற ரோபாட்டை அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது இது தாமதமாகலாம் என, கூறப்படுகிறது.
இது குறித்து, இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறியதாவது:ஊரடங்கு உத்தரவால், முதல் விண்கலத்தை தயாரிக்கும் பணியில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாதங்கள் உள்ளதால், விண்கலத்தை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்ய முடியும். இதுவரை, இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படியே தாமதமானாலும், அதிக நாட்களுக்கு அது ஒத்தி வைக்கப்படாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
AthibAn Tv