ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 40வது கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று நடைபெற உள்ளது. மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், மாநிலங்களின் வரி வருவாய் இழப்பை ஈடு செய்வது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, தெரிகிறது. இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பித்த ஊரடங்கால், மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய், வெகுவாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த, ஏப்., மே மாதங்களுக்கான ஜி.எஸ்.டி., வருவாய் விபரங்களை, மத்திய நிதியமைச்சகம் வெளியிடவில்லை. இது தொடர்பாக, இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என, தெரிகிறது.
கடந்த, மார்ச், 14ல் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கூட்டத்தில், மாநிலங்களின் வரி வருவாய் இழப்பை சமாளிக்க, நிதிச் சந்தையில் கடன் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என, நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இந்த அம்சத்துடன், வரி வருவாய் இழப்பை ஈடு செய்ய, மாநில அரசுகள் வாங்கும் கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பது தொடர்பாகவும், இன்று விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
AthibAn Tv