அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி பயப்படுவதாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ஏற்கனவே வயநாடு தொகுதியில் களமிறங்கிய ராகுல் காந்தி, இரண்டாவது முறையாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
அமேதி தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் லால் சர்மா போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி பயப்படுவதாக பிரதமர் மோடி கிண்டலடித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பர்தாமான் மாவட்டம் துர்காபூரில் நடைபெறும் பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:
துர்காபூர் ஒரு தொழில் நகரமாக இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அறியப்பட வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் இந்துக்களை 2ம் தர குடிமக்களாக நடத்துகிறது. அரசியலமைப்பை மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது. தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இடஒதுக்கீட்டை அபகரித்து ஜிகாதி வாக்கு வங்கிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்குமாறு காங்கிரஸுக்கு சவால் விடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
அமேதியில் போட்டியிட காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி அஞ்சுகிறார். அதனால்தான் அவர் ரேபரேலியில் போட்டியிடுகிறார்.
திரிணாமுல் காங்கிரஸின் பள்ளி வேலை வாய்ப்பு மோசடியால் வேலை இழந்த ஆசிரியர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்க மேற்கு வங்க பா.ஜ.க. தலைமைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மனிதாபிமானத்தை விட நல்லிணக்கமே முக்கியம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசு சந்தேஷ்கலி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகானை பாதுகாத்து வருகிறது.
அவர் கூறியது இதுதான்.
AthibAn Tv