அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைத்திருந்த தன் தேர்தல் பிரசாரத்தை, ஓக்லஹாமா மாகாணத்தில் இருந்து துவங்குகிறார்.அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 3ம் தேதி நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் களமிறங்குகிறார். ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதிபர் டிரம்ப், மூன்று மாதங்களுக்கு முன், தன் தேர்தல் பிரசாரத்தை நிறுத்தியிருந்தார்.அதை மீண்டும் துவங்கவுள்ள அதிபர் டிரம்ப், நேற்று கூறியதாவது:தேர்தல் பிரசாரத்தை, ஓக்லஹோமா மாகாணத்தின் துல்சா நகரில் இருந்து, மீண்டும் துவங்குகிறோம். அடுத்து, புளோரிடாவில் பிரமாண்ட பேரணியை நடத்துகிறோம்.அதைத் தொடர்ந்து, டெக்சாஸ், அரிசோனா, வட கரோலினா மாகாணங்களிலும், பெரிய அளவில் பேரணி நடத்துகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
குடியரசு கட்சி வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் மாநாடு, வட கரோலினாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ஜனநாயக கட்சி வசமிருக்கும் அம்மாகாணத்தில், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படாததால், அம்மாநாட்டை வேறு மாகாணத்தில் நடத்த, அதிபர் டிரம்ப் முடிவு செய்துஉள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.அதிபர் டிரம்பின் பேரணிகளில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் பேரணிகளில் கூடும் கூட்டத்தை விட, அதிகமாகவே காணப்படுகிறது. எனினும், செய்தி நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், ஜோ பிடன் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அமெரிக்காவில், ராணுவ அதிகாரிகளின் பெயர்களுடன் உள்ள, 10 ராணுவ தளங்களின் பெயர் மாற்றம் செய்யப்படும் என வெளியான செய்தியை, அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த சக்தி வாய்ந்த தளங்கள், அமெரிக்க பாரம்பரியத்தின் அங்கமாக மாறிவிட்டன. ஆகையால், இவற்றின் பெயர்களை மாற்ற, என் நிர்வாகம் ஒருபோதும் நினைக்காது,” என்றார்.
AthibAn Tv