சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ரஷ்ய நிறுவனத்துக்கும், இஸ்ரோவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் என்பதால், மிகவும் எச்சரிக்கையுடன், அதே நேரம் துரிதமாகவும் இதற்கான பணிகள் இஸ்ரோவில் நடந்து வருகின்றன.
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ‛ககன்யான்', கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படாது, அதன் தயாரிப்புப் பணிகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவால், ரஷ்யாவில் நான்கு இந்திய விண்வெளி வீரர்களின் பயிற்சி நிறுத்தப்பட வேண்டியிருந்தது. இருந்தாலும் இஸ்ரோவின் தலைவர் மற்றும் விஞ்ஞானக் குழுவின் கருத்து என்னவெனில், பயிற்சித் திட்டத்திலும், காலக்கெடுவைத் தொடங்குவதிலும் வசதியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர், இந்தப் பணி முடிவடையும் நோக்கில் விண்வெளி வீரர்களின் பயிற்சி இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) என்ற ஒழுங்குமுறை அமைப்பு நிறுவப்பட உள்ளது. இது தனியார் விண்வெளி வீரர்களுக்கு ஒரு நிலையான இடத்தை வழங்கவும், அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் உதவும். நமது விண்வெளிப் பயணங்களின் திறன் மற்றும் வளங்களை மேம்படுத்துவதுடன் தனியார் விண்வெளி வீரர்களின் அதிகப் பங்களிக்க உதவும். சந்திரயான்-3 அடுத்த ஆண்டு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஒரு லேண்டர், ரோவர் மற்றும் ஒரு உந்துவிசை அமைப்புத் தொகுதிகளை நிலவுக்குக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
AthibAn Tv