சீனாவில் உள்ள பன்றிகளுக்கு அடிக்கடி ஏற்படும் வைரஸ் காய்ச்சல், மனிதர்களுக்கு பரவும் ஆற்றல் கொண்டதெனவும், இது மேலும் மாற்றமடைந்து மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்பதோடு உலகளாவிய தொற்றாக மாறக்கூடுமென புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்தாண்டு சீனாவின் வூஹானில் இருந்து கிளம்பிய கொரோனா தொற்றை சமாளிக்க முடியாமால் உலக நாடுகள் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில், தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புதிய காய்ச்சல் வைரசிற்கு ஜி 4 என பெயரிடப்பட்டுள்ளது. புதிய ஜி 4 வைரஸ், மரபணு ரீதியாக 2009ல் பரவிய எச் 1 என் 1 தொற்று விகாரத்திலிருந்து வந்துள்ளது. சீன பல்கலை மற்றும் சீனாவின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பின் விஞ்ஞானிகள், புதிய வைரஸ் மனிதர்களை பாதிக்க மிகவும் ஏற்றதாக இருப்பதற்கான அனைத்து முக்கிய அடையாளங்களும் இருப்பதால், நெருக்கமாக கண்காணிப்பது அவசியமென கூறியுள்ளனர்.
ஜி 4 வைரஸால் மனிதர்கள் பாதிக்கப்பட்டால் மிகவும் கவலைக்குரியதாக மாறும் மற்றும் மனித தொற்று நோயாக மாறி அபாயத்தை அதிகரிக்குமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய வைரஸ் மூன்று மரபணுக்களின் தனித்துவ கலவையாகும். ஒன்று ஐரோப்பிய மற்றும் ஆசிய பறவைகளில் காணப்படும் மரபணுவோடும், 2009ல் பரவிய எச் 1 என் 1 மரபணுவோடும் மற்றும் வட அமெரிக்க எச் 1 என் 1 மரபணுவோடும் பறவை, மனித மற்றும் பன்றி காய்ச்சல் வைரஸ்களிலிருந்து வரும் மரபணுக்கள் உள்ளது. ஜி 4 மாறுபாடு மிக முக்கியமானது. ஏனெனில், அதன் மையம் பறவை காய்ச்சல் வைரஸ் ஆகும். பாலூட்டியின் மரபணு கலந்திருக்கும் என்பதால், மனிதர்களுக்கு அதனை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி இல்லை.
சீன வேளாண் பல்கலையை சேர்ந்த லியு ஜின்ஹுவா தலைமையிலான குழு, 10 சீன மாகாணங்களில் உள்ள இறைச்சிக் கூடங்களில் பன்றிகளிடமிருந்து எடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 30,000 மாதிரிகளையும், 2011 முதல் 2018 வரை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறிகுறிகளுடன் உள்ள பன்றிகளிடமிருந்து 1,000 மாதிரிகளையும் ஆய்வு செய்தது. இது தொற்றுநோயான காய்ச்சல் குறித்து அடையாளம் காணும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 179 பன்றி காய்ச்சல் வைரஸ்கள் கிடைத்தன. அவற்றில் பெரும்பாலானவை ஜி 4 அல்லது ஐந்தில் ஒன்று யூரேசிய பறவை காய்ச்சலுடன் தொடர்புடையதாக இருந்தது. இதனை இருமல் மற்றும் தும்மல் போன்ற மனிதர்களை ஒத்த அறிகுறிகளை அனுபவிக்கும், காய்ச்சல் ஆய்வுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாலூட்டியான ஃபெர்ரெட்டுகள் உள்ளிட்டவற்றிலும் பல்வேறு சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். அதில் ஜி 4 வைரஸ் வேகமாக தொற்றாக பரவகூடியது. மனித உயிரணுக்களில் பிரதிபலிக்கும் மற்றும் பிற வைரஸ்களை விட ஃபெர்ரெட்டுகளில் மிகவும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்தனர்.
பருவகால காய்ச்சலுக்கு ஆட்படும் போது மனிதர்கள் பெறும் எந்தவொரு நோய் எதிர்ப்பு சக்தியும், ஜி 4ல் இருந்து பாதுகாப்பை வழங்காது என்பதையும் சோதனைகள் காட்டுகின்றன. ஆன்டிபாடிகளைக் காட்டும் ரத்த பரிசோதனையில், 10.4 சதவீதம் பன்றித் தொழிலாளர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களில் 4.4% பேரும் பாதிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
புதிய வைரஸ் ஏற்கனவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குச் சென்றுவிட்டது. ஆனால் அது மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவியிருக்கலாம் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லையென விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதிய வைரஸால் பாதிக்கப்பட்ட சீன பன்றிகளின் கண்காணிப்பை வலுப்படுத்தவும், பன்றிகளுடன் பணிபுரியும் மக்களை கண்காணிக்க அவசர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.
AthibAn Tv