'வெப்பச் சலனம் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலான மாவட்டங்களில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று(மே 30) சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான, மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களில், பெரும்பாலான நேரங்களில், பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம். வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அதிகபட்சமாக, 41 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகும்.
சென்னையில், 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும். குமரி, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று வீசுவதால், இன்று வரை அங்கு செல்ல வேண்டாம். தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், நாளை முதல், ஜூன், 5 வரை அங்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
AthibAn Tv