கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி இரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பரவல் குறையாததால் அதற்கு பின்னும் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து நான்காம் கட்டமாக புதிய தளர்வுகளுடன் மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் வைரஸ் பாதிப்பு பகுதிகளை அடையாளம் கண்டு வரையறை செய்வதுபோக்குவரத்தை இயக்குவது போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே கொடுத்துள்ளது.இந்நிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு நாளை நிறைவடைய உள்ள நிலையில், 5-ம் கட்டமாக இன்று மத்திய அரசு அன்லாக் 1. 0 என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
அதன் விபரம்:
இன்று வெளியிடப்பட்ட தளர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்:
* நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீட்டித்தும், மற்ற பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* இந்த ஊரடங்கின் போது அவசர அத்தியவாசிய தேவைகளை தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது.
1.0 முதல்கட்ட தளர்வுகள்:
* ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.
2.0 இரண்டாம் கட்ட தளர்வுகள்
* இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.
3.0 மூன்றாம் கட்ட தளர்வுகள்
* மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வுகளும் கிடையாது. பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
AthibAn Tv