கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கார்டை மட்டும் காட்டி, ரூ.50 ஆயிரம் வரை யார் வேண்டுமாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூ கூறியதாவது: முதல்வர் இபிஎஸ் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டை மட்டும் காட்டி, ரூ.50 ஆயிரம் வரை யார் வேண்டுமாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே மக்களுக்கு தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அத்துடன் பல்வேறு நலவாரிய தொழிலாளர்களுக்கு ரூ.2000 வரை உதவி தொகை வழங்கி உள்ளது. அனைத்து ரேஷன் கார்டு தார்களுக்கும் ரூ.1000 வழங்கி இருந்தது.
திமுக தலைவர் ஸ்டாலினின், ஒன்றிணைவோம் திட்டம் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? திமுக அளித்த புகார் மனுக்களில் ரேஷன் கடை புகார் சம்ந்தமாகவோ, உணவு கிடைக்கவில்லை என்றோ எந்த மனுவும் இல்லை. பத்து, இருபது பேருக்கு உதவி செய்து விட்டு, லட்சக்கணக்கில் உதவியதாக திமுக கூறுவது போல, ஒரு சில மனுக்களை வைத்துக்கொண்டு லட்சணக்கில் புகார் மனுக்கள் பெற்றுள்ளோம் என ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலினின் குணம் கோணலாக உள்ளது. தமிழக மக்களிடையே முதல்வர் நல்ல பேர் வாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் குறை கூறுகிறார்.
இக்கட்டான நேரத்தில் முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல், குறை கூறும் ஸ்டாலினைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு தோல்வி எனக் கூறிய ராகுல், தமிழகத்தின் ஊரடங்கு பற்றி கூறியிருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
AthibAn Tv