Type Here to Get Search Results !

மோடியை பாராட்டிய நீதிபதி அருண் மிஸ்ரா மனித உரிமை ஆணைய சேர்மனாக அறிவிப்பு... Praising Modi, Judge Arun Misra announced as the Chairman of the Human Rights Commission ...



தேசிய மனித உரிமை ஆணையத்தின் சேர்மனாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா நியமிக்கப்பட உள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவின் வலுவான அமைப்புகளில் ஒன்று. இந்த ஆணையத்திற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அல்லது முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இவர்களுக்கான பதவிக்காலம் 3 வருடம் அல்லது 70 வயது ஆகும். இந்த நிலையில் இந்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் சேர்மேன் எச்எல் தத்து (முன்னாள் தலைமை நீதிபதி) டிசம்பர் 2020ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து இந்த பதவி நிரப்பப்படாமல் காலியாக இருந்தது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பாராபுல்லா இதன் தற்காலிக ஆக்டிங் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் தேசிய மனித உரிமை ஆணையத்தின் சேர்மனாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா நியமிக்கப்பட உள்ளார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்ய சபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜ்ன் கார்கே ஆகியோர் அடங்கிய கமிட்டி மூலம் அருண் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார். இதில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜ்ன் கார்கே அருண் மிஸ்ராவின் தேர்வை எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா செப்டம்பர் 3, 2020ல் ஓய்வு பெற்றார். அருண் மிஸ்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பல வழக்குகளை விசாரித்துள்ளார். 2014ல் இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். கடந்த வருடம் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 1 ரூபாய் அபராதம் விதித்தார்.

இவர் நீதிபதியாக இருந்த சமயத்தில் நிறைய விமர்சனங்களை சந்தித்துள்ளார். முக்கியமாக 2020ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியை , உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட, சிறந்த தலைவர், பல்துறை மேதை, உலக தரமாக சிந்திக்க கூடியவர் என்றெல்லாம் பாராட்டினார். நீதிபதியாக பணியில் இருந்த போதே அருண் மிஸ்ரா இப்படி பேசியது விமர்சனங்களை சந்தித்தது.

இந்த நிலையில்தான் தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் சேர்மனாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா நியமிக்கப்பட உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.