Type Here to Get Search Results !

14 ஆண்டுகள் நித்திரையிலேயே காலத்தைக் கழித்தவர்! இராமாயண போரின் வெற்றிக்கு காரணமானவர்!


இராமாயணத்தில் மிகப் பெரிய தியாகம் செய்தவர், சீதையின் சகோதரியான லட்சுமணனின் மனைவி ஊர்மிளா ஆவார். ராமாயணத்தில், ராமர் - சீதையின் காதல் கதை அளவிற்கு இணையான காதல் லட்சுமணன் - ஊர்மிளையின் காதல் கதையாகும். லட்சுமணன், இராமருடன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற பின் ஊர்மிளை அரண்மனையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததாக நினைத்தால் அது மிகப் பெரும் தவறு. ராமாயண போரின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஊர்மிளையின் தியாகம் தான்.

ஊர்மிளா சீதையின் முதல் சகோதரி ஆவார் .இவர் லட்சுமணனை கண்டதும் காதல் வரவில்லை. ஆனால் தன் சகோதரியின் மீது கொண்ட அன்பினால் சீதையை பிரிய மனமில்லாமல், லட்சுமணனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். எனினும், இருவருக்குள்ளும் ஒரு அழகிய காதல் கதை ஒளிந்திருந்தது. இதனை அவர்களைத் தவிர யாரும் அறியவில்லை.

ராமர் வனவாசம் செல்லும் போது அவரை விட்டு எப்பொழுதும் பிரியாத லட்சுமணன் தன் மனைவியிடம் கூட கேட்காமல் அவருடன் வனவாசம் செல்ல ஆயத்தமானார். லட்சுமணன் தன் முடிவை ஊர்மிளாவிடம் சொல்லத் தயங்கினார் .ஏனெனில், சீதையைப் போல ஊர்மிளாவும் தன்னுடன் வனவாசம் கிளம்பி விட்டால் என்ன செய்வது? என்று குழம்பிப் போனார். ஆனால், அங்கு லட்சுமணனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஊர்மிளா தான் மகாராணி போல பட்டுடுத்தி நகைகளை அணிந்து கொண்டிருந்தார். அதனைக் கண்டு ஆத்திரம் கொண்ட லட்சுமணன், உனது சகோதரியும் அவர்களது கணவரும் வனவாசம் செல்லும் நேரத்திலும் இப்படி அலங்கரித்துக் கொண்டு ராஜ வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறாய், இனி உன் முகத்தில் விழிக்க மாட்டேன்! என்று கூறி கோபத்துடன் சென்றார். லட்சுமணன் அங்கிருந்து சென்றவுடன் தன் திட்டம் நிறைவேறியதை எண்ணி மனதிற்குள் அழுதார் ஊர்மிளா. தன் கணவர் தன் மீது கோபத்துடன் சென்றாலும் அதைத்தான் ஊர்மிளாவும் விரும்பினார். காரணம், தானும் லட்சுமணனுடன் வனவாசம் சென்றாலும் அல்லது இங்கே அவரை எண்ணி வருத்தத்துடன் இருந்தாலோ, அவர் தன் கடமையை முழுமையாக செய்ய இயலாது என்பதை நன்கு அறிந்திருந்தார் ஊர்மிளா. அதனால் தான் அவர் ராஜ வாழ்க்கைக்கு ஆசைப்படுவது போல நடித்து லக்ஷ்மணனை கோபம் கொள்ள செய்தார். இனி வனவாசம் முடியும் வரை அவர் ஒரு நொடி கூட தன்னுடைய நினைவு இல்லாமல், அவருடைய கடமையை முழு மனதுடன் செய்வார் என நம்பினார் ஊர்மிளா.

ஊர்மிளாவின் தியாகம் :

வனவாசத்தில் ராமர் மற்றும் சீதைக்கு பாதுகாப்பு கவசமாக லட்சுமணன் இருந்தார் என்றால். லட்சுமணனுக்கு பாதுகாப்பு அரணாய் இருந்தது ஊர்மிளாவின் பவித்திரமான அன்பு. இரவும் பகலும் தன் அண்ணனையும் சீதையையும் காக்க எண்ணிய லட்சுமணன் தன் தூக்கத்தை 14 ஆண்டுகள் தியாகம் செய்ய முடிவு செய்தார். ஆனால், அதற்கு தூக்கத்தின் கடவுளான நித்திராதேவி சம்மதிக்கவில்லை. அப்பொழுது தன் கணவரின் கடமைக்காக அவருடைய தூக்கத்தையும் சேர்த்து நான் தூங்குகிறேன் என்று நித்ரா தேவியிடம் கோரிக்கை வைத்து, அதில் வெற்றி கண்டார் ஊர்மிளா. தூங்குவது மிகப்பெரிய தியாகமா? என்று நினைக்கலாம். ஆனால், உணவின்றி 14 ஆண்டுகள் லட்சுமணன் உடைய தூக்கத்தையும் சேர்த்து தூங்குவது சாதாரண தியாகம் அன்று.இதனால் ஊர்மிளாவின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கக்கூடும் என்பதை பொருட்படுத்தாமல்.தன் கணவரின் மீது கொண்ட காதலுக்காக அதனை செய்ய முன்வந்தார்.

இலங்கையில் நடந்த போரில்,இராவணனின் மகன் இந்திரஜித்தை வதைப்பது என்பது ராமருக்கே இயலாததாய் இருந்தது. காரணம், இந்திரஜித் வாங்கிய வரம் “எவன் ஒருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ, அவனால் மட்டுமே தான் கொல்லப்பட வேண்டும்” என்று வரம் பெற்றிருந்தார்.அதன்படி லட்சுமணன் தூக்கத்தையும் சேர்த்து ஊர்மிளா 14 ஆண்டுகள் தூங்கியதால் இந்திரஜித்தை கொல்லும் தகுதி பெற்ற ஒரே ஆளாக லட்சுமணன் இருந்தார். ஊர்மிளாவின் தியாகம் இல்லை என்றால் இராமரால் போரில் வெல்வது மிகக்கடினமாய் இருந்திருக்கும்.

இராமர் விஷ்ணுவின் அவதாரம், சீதாதேவி லட்சுமியின் அவதாரம், லட்சுமணன் ஆதிசேஷனின் அவதாரம் ,இவர்கள் தங்களின் கடமையை செய்ய தியாகங்கள் செய்ததைக் காட்டிலும், மனித பிறவியான ஊர்மிளா தன் கணவரின் மீது கொண்ட காதலுக்காக செய்த தியாகம் மிகப் பெரியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom