ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அம்மா வளர்த்த கட்சியை நூறாண்டுகாலம் கொண்டு செலுத்த வேண்டும். நமது பொது எதிரி திமுகதான். ஆகையால் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார் சசிகலா. அவரைப்பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் ஆண்டு கொள்ளட்டும். ஆனால் அதிமுக தோறுவிடக்கூடாது என்பட்தில் பக்குவமாய் நடந்து கொள்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் காட்டுவதால் எரிச்சலான டி.டி.வி.தினகரன், ’’நம்மால் ஆட்சி அதிகாரத்தை அடைந்தவர்கள், நமக்கு துரோகம் செய்தவர்கள் நம்மை ஒதுக்கி வைப்பதா? அவர்களுக்கு உண்டான அதிகாரம் நம்மால் கிடைக்கப்பெற்றது.
அவர்களிடம் இருந்து அதிகாரத்தை நாம் மீண்டும் பெற்றே ஆக வேண்டும். கொடுத்தவனுக்குத்தான் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் இருக்கிறது. இப்படியே விட்டுக்கொடுத்தால் அதுவே நமக்கு ஆபத்தாக முடிந்துவிடும். அதிகாரம் நம் குடும்பத்திற்கு வந்தே ஆக வேண்டும்’ என்று கொதிக்கிறார். அதனை பிறதிபலிக்கும் விதமாக, இப்போது நடப்பது அம்மா ஆட்சி அல்ல என எடப்பாடி பழனிசாமி தலைமையினால ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார் டி.டி.வி.தினகரன்.
ஆனால் சிறை மீண்டு வந்தபிறகும் பக்குவமாக பேசி, நம்மை நாடி வந்து பதவி இழந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்காவது சீட் வாங்கிக் கொடுத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என விரும்புகிறார் சசிகலா. அதனால்தான் ஆளும் கட்சியை விமர்சிக்காமல் நாமெல்லாம் ஒரே அணியாய் இருக்க வேண்டும் எனப்பேசினார் சசிகலா. அவரது பேச்சில் அனுபவம் கலந்த ஒரு பக்குவம் இருந்தது. ஆனால் அதனை டி,டிவி,தினகரன் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக கூறுகின்றனர். அதிமுகவில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும் என இப்போதும் நம்பிக்கையில் இருக்கிறார் சசிகலா.
இந்நிலையில்தான் இன்று நடைபெற்ற அமமுக செயற்குழு- பொதுக்குழுவில் பேசிய டி.டி.வி.தினகரன், ‘’சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவை மீட்டெடுப்போம். அமமுக அமைக்கும் அணி தான் முதல் அணி, எங்களுடன் தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போதைக்கு கூறமுடியாது. சசிகலா சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். அமமுக தலைவர் பதவி காலியாக உள்ளது. அதனை அவர் எடுத்துக் கொள்ளலாம்’’ எனத் தெரிவித்தார்.
ஆனால் சசிகலாவோ எதிலும் அவசரம் வேண்டாம். பழி வாங்க நினைத்து மீண்டும் பலிகிடாவாகி விடக்கூடாது. இப்போதைக்கு அமைதியாக இரு என டி.டி.வி.தினகரனை அமைதிப்படுத்த முயற்சித்து வருகிறார் சசிகலா. ஆனால் டி.டி.வி.தினகரன் இதனை செவிமடுத்து கேட்காததால் கடும் விரக்தியில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது.
AthibAn Tv