படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திட 3.51 லட்சம் கோடி மதிப்பீட்டில் 304 தொழில் வர நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது, 10 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திட நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளது என்று தெரிவித்த முதல்வர் பழனிசாமி, ஐந்து முறை ஆட்சியில் இருந்த தி.மு.க ஏன் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, களக்காடு பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினரிடையே உரையாற்றினார். அப்போது, பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி அ.தி.மு.க என்று தெரிவித்தார். அ.தி.மு.க அரசால் பெண்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், தாலிக்கு தங்கம் திட்டத்தில் வழங்கப்படும் தங்கம் 8 கிராம் அளவு உயர்த்தி வழங்கப்படுவதை சுட்டிக் காட்டினார். மேலும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் ஆகிய பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை குறிப்பிட்டு பேசினார்.
மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறும் கட்சி தி.மு.க என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 70 வயதாகும் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருந்தபோது ஏன் மக்களை சந்திக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
No comments
Post a comment