எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வாழ்ந்த காலம் பொற்காலம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா கோயிலை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி திறந்து வைத்தார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில், இருபெரும் தலைவர்களுக்கும் பிள்ளைகள் கிடையாது. இங்கே மேடையில் அமர்ந்திருப்பவர்கள்தான் பிள்ளைகள். மக்களுக்காக வாழ்ந்த இருபெரும் தலைவர்களை தெய்வங்களாக போற்றிப் புகழக்கூடிய இந்த நன்னாளில் மீண்டும், அதிமுக அரசு வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுஆட்சி அமைப்போம். அது தான் நம்முடைய எண்ணங்கள். ஜெயலலிதா சட்டமன்றத்தில், எனக்குப் பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் தொடரும் என்று வீர முழக்கமிட்டார்கள். அந்த வீர முழக்கத்திற்கிணங்க நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, தெய்வ சக்தி படைத்த இருபெரும் தலைவர்களின் ஆசியோடு வெற்றி வாகை சூட வேண்டும், மீண்டும் அதிமுக ஆட்சி தொடர உழைப்போம், வெற்றி பெறுவோம்.
எம்.ஜி.ஆர். சிறுவயதில் தான் பட்ட கஷ்டம் இந்த மண்ணில் பிறந்த பிஞ்சுகள் யாரும் படக்கூடாது என்பதற்காக வயிறார உணவளித்து சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்து சரித்திரம் படைத்தவர். அவருடைய காலம் பொற்காலம். அதே வழியில் வந்த ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பல்வேறு திட்டங்களைத் தீட்டி நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். அவருடைய காலத்தில் தான் அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், நோட்டு, காலணி, சைக்கிள், அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க மடிக்கணினி என அனைத்தும் வழங்கினார்.
அந்த இரு பெரும் தலைவர்களுக்கும் புகழும், பெருமையும் சேர்க்கின்ற வகையில் அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறது. எம்.ஜி.ஆர்.க்கு நூற்றாண்டு விழா கண்ட ஒரே கட்சி அதிமுக. 32 மாவட்டங்களுக்கும் சென்று நூற்றாண்டு விழா கொண்டாடி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து, அவற்றையெல்லாம் நிறைவேற்றி, பெருமை சேர்த்தது அரசு.
எம்.ஜி.ஆர்.க்கு காமராசர் சாலையில் அற்புதமான வளைவை அமைத்துக் கொடுத்ததும் அதிமுக அரசு. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு மத்திய அரசிடம் கூறி, அவரது பெயர் சூட்டி பெருமைப்படுத்தியது அரசு. இரண்டு நாள்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகே எஜெயலலிதா னைவிடத்தை பிரம்மாண்டமான முறையில் திறந்து வைத்தோம். அதற்கு அருகில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தையும் 12 1/2 கோடி ரூபாய் செலவில் சீர் செய்தோம். இது இருபெரும் தலைவர்களுக்கு நாம் செலுத்துகின்ற நன்றி.
அந்த நன்றியை நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு, இந்த நாடே வியக்கின்ற அளவுக்கு ஃபீனிக்ஸ் பறவை போல அற்புதமான நினைவிடத்தைக் கொடுத்த ஒரே இயக்கம் அதிமுக.
அதுமட்டுமல்ல, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்திலுள்ள வேதா நிலையத்தை அம்மா நினைவு இல்லமாக நாம் திறந்தோம். ஒவ்வொரு ஆண்டும் ஜெயலாலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் நாளன்று அரசு விழாவாகக் கொண்டாடி அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டி அவருக்கு நன்றி செலுத்துவோம் என்ற அறிவிப்பை கொடுத்திருக்கிறோம்.
இருபெரும் தலைவர்கள் வாழ்ந்த காலம் பொற்காலம், அந்த இருபெரும் தலைவர்களின் ஆட்சி அந்த காலத்தில் தொடங்கி, இதுவரை அதிமுக முப்பதாண்டு காலம் இந்த மண்ணில் ஆட்சி அதிகாரத்தை செய்து, எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, குடிசைகளில் வாழ்கின்ற கடைக்கோடி மக்கள் கூட உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பாடுபட்ட ஒரே அரசு அதிமுக அரசு என்பதைத் தெரிவித்து கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
AthibAn Tv