திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அதிமுக செயல் வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.30) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஆலங்காயம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சம்பத்குமார் தலைமை வகித்தார். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் முன்னிலை வகித்தார்.
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
"அதிமுக ஆட்சியில் செய்த எண்ணற்ற சாதனைகளை மக்கள்முன் நிறுத்தி, தேர்தலைத் துணிச்சலுடன் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. தமிழக மக்களுக்காக திமுக இதுவரை என்ன செய்துள்ளது என்பது மக்களுக்குத் தெரியும்.
தமிழகத்தில், சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கி வருவதால் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் மக்களைத் திரட்டி அவர்களை ஏமாற்றி வருகின்றனர். செய்யாத திட்டங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் திமுகவினர் கூறி வருகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடத் தயார்.
அதேபோல, தைரியம் இருந்தால் திமுக கூட்டணி அமைக்காமல் வரும் தேர்தலில் போட்டியிட முடியுமா?". இவ்வாறு அமைச்சர் வீரமணி சவால் விட்டுக் கேள்வி எழுப்பினார்.
AthibAn Tv