Type Here to Get Search Results !

கட்சி துவங்குவது குறித்து, மன்ற நிர்வாகிகளுடன், நடிகர் ரஜினி இன்று(நவ.,30) ஆலோசனை நடத்துகிறார்



கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும், நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில், அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினி, 'அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள, சில தகவல்கள் உண்மையானவை' என, ஒப்புக் கொண்டார்.

இதனால், ரஜினி கட்சி துவக்குவாரா; மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, 'அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, முடிவை அறிவிப்பேன்' என, 'டுவிட்டர்' வாயிலாக, ரஜினி தெரிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன், ரஜினி இன்று ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து, 234 சட்டசபை தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்தவும், அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் கூறியதாவது: தன் பெயரில் வெளியான கடிதத்தை தொடர்ந்து, அரசியல் பேசுகிற முக்கிய பிரமுகர்களை சந்திப்பதையும், அவர்களிடம் அரசியல் குறித்து பேசுவதையும், ரஜினி தவிர்த்து விட்டார். சமீபத்தில், மத்திய உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷாவின், சென்னை பயணத்தை ஒட்டி, ரஜினியை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசினார். ஆனாலும், அமித்ஷா - ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை.

இந்தச் சூழ்நிலையில், பா.ஜ.,வுடனான கூட்டணி நீடிப்பதாக, அ.தி.மு.க, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், 'ஆள்பவர்கள் முதல் ஆள நினைப்பவர்கள் வரை கண்டு அஞ்சும், அரசியல் ஞானி ரஜினி' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள், தி.மு.க., அலுவலகமான, சென்னை அறிவாலயம் முன், ரசிகர்களால் நேற்று ஒட்டப்பட்டன.

'வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி கட்சி துவக்கி, போட்டியிட வேண்டும்' என, போஸ்டர்கள் மற்றும் சமூக வலைதங்கள், கடிதங்கள் வாயிலாகவும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, கட்சி துவங்கி, தனித்து போட்டியிடுவாரா; பா.ஜ.,வுடன் கூட்டணி அல்லது தன் நீண்ட கால நண்பரான கமலின், மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

இதனால், ரஜினி உறுதியான முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல முடிவை எடுக்கவே, இன்று நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார்.ரஜினியை, அவ்வளவு சீக்கிரமாக, யாராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியாது என்பது, அவருக்கு நெருக்கமானர்களுக்கு தெரிந்த விஷயம். எனவே, அவரது முடிவு, யாரும் எதிர்பாராத வகையில், அதிசயமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது, தேசிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி துவக்க முடிவெடுத்தால், 234 தொகுதிகளுக்கும், வேனில் ரத யாத்திரை செல்லவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom