தென்கிழக்கு வங்கக்கடலில் புதியதொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தூத்துக்குடி (38) மற்றும் கன்னியாகுமரி (172) மாவட்டத்தை சார்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பில் தற்போது ஈடுப்பட்டுள்ள 210 படகுகளை கடலோர பாதுகாப்புப்படை உதவியுடன் பத்திரமாக கரைக்கு கொண்டு வர தமிழக அரசால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி நவ. 28 அன்று தென்கிழக்கு வங்கக்கடலில் புதியதொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் (புரெவி) இது வரும் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் வடஇலங்கை வழியாக மன்னார் வளைகுடா கடற்பகுதியினை கடந்து குமரி கடல் வழியே அரபி கடலுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தென்தமிழகத்தின் இராமநாதபுரம், தூத்துக்குடி, மற்றும் குமரி மாவட்ட மீன்துறை இணை/துணை/உதவி இயக்குநர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு, மீனவர் கூட்டுறவு சங்கங்கள், ஆழ்கடல் மீன்பிடி ஒருங்கிணைப்பு சங்கங்கள் மற்றும், தேவாலயங்கள் மூலம் புயல் எச்சரிக்கை தகவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ. 29 முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும், ஏற்கனவே ஆழ்கடல் மீன்பிடிப்பிலுள்ள விசைப்படகுகளை, செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் விஎச்எப் தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் தொடர்பு கொண்டு அருகிலுள்ள மீன்பிடித்துறைமுகங்கள் / மீன்பிடித்தளங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு கரை திரும்பிட உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடி படகுகளை தொடர்பு கொண்டு அவற்றை பாதுகாப்பாக கரைதிரும்ப ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் (தொடர்பு எண்: 04651- 226235) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் (தொடர்பு எண்: 0461 – 2320458) 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. மீன்வளத்துறை இயக்குநரக கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் (தொடர்பு எண்: 044-29530392) உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், தூத்துக்குடி (38) மற்றும் கன்னியாகுமரி (172) மாவட்டத்தை சார்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பில் தற்போது ஈடுப்பட்டுள்ள 210 படகுகளை கடலோர பாதுகாப்புப்படை உதவியுடன் பத்திரமாக கரைக்கு கொண்டு வர தமிழக அரசால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 8 படகுகள் இதுவரை கரைக்கு திரும்ப வரப்பட்டுள்ளது.
மேலும், மீன்வளத்துறை இயக்குநர் அவர்களால் அண்டைய மாநிலமான கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் இலட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் மீன்துறை இயக்குநர்களுக்கு அம்மாநில மீன்பிடி துறைமுகங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களின் படகுகளை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கவும் உரிய உதவிகள் வழங்கிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொச்சின், கோவா, மும்பை மற்றும் இலட்சதீவில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்பு படை மூலம் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 218 படகுகளின் இருப்பிடம் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு அவர்களை கரைப்பகுதிக்கு மீட்பு செய்து கொண்டு வரவும் கடலோர பாதுகாப்புப்படை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 8 படகுகள் திரும்ப வரப்பட்டுள்ளது. மேலும், கரை திரும்பாத மீனவர்கள் மற்றும் 210 படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது".
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
AthibAn Tv