ஒரு கொலையை மறைக்க, ஒன்பது பேரைக் கொன்ற வழக்கில், பீஹாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு, தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துஉள்ளது.
தெலுங்கானா வாரங்கல்நகரை ஒட்டியுள்ள கோரோகுண்டா கிராமத்தில், இந்தாண்டு மே, 20ம் தேதி, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட, ஒன்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உடல், ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.இவர்கள் அங்குள்ள ஒரு கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவர் பீஹாரையும், ஒருவர், திரிபுராவையும் சேர்ந்தவர்.
ஊரடங்கு உத்தரவால், போதிய வருமானம் இல்லாமல் தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகப்பட்டனர்.தீவிர விசாரணை நடத்தியதில், அவர்களுடன் வேலை பார்த்து வந்த, பீஹாரைச் சேர்ந்த, சஞ்சய் குமார் யாதவ், 25, இவர்களை கொன்றது தெரியவந்தது. கொல்லப்பட்ட ஒன்பது பேரில் ஒருவரான முகமது மக்சூதின் உறவினரான, ஒரு இளம் பெண், இந்தாண்டு மார்ச் மாதத்தில் கொல்லப்பட்டார். அவரும் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். மேற்கு வங்கத்துக்கு சென்றபோது, கணவரை இழந்த அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சஞ்சய் குமார் யாதவ் கொலை செய்துள்ளார்.
காதலிக்க மறுத்ததால், அவர் இந்தக் கொலையை செய்துள்ளார். ஆனால், இந்தக் கொலை விவகாரம் வெளியே தெரியவில்லை.இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் வராததால், மக்சூத் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். அதையடுத்து, அவர்களை கொலை செய்ய யாதவ் திட்டமிட்டார். உணவில் மயக்க மருந்து கொடுத்துள்ளார். தூங்கிய அனைவரையும், கிணற்றுக்குள் துாக்கி வீசி கொலை செய்துள்ளார்.
ஒரு கொலையை மறைக்க, ஒன்பது பேரை அவர் கொன்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட, 25 நாட்களில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த, வாரங்கல் நீதிமன்றம், கொடூர கொலை செய்த சஞ்சய் குமார் யாதவுக்கு, துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
AthibAn Tv