பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை இன்றுடன் ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக ராஜ்யசபாவில், பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் திட்டமிடப்படி ஜூலையில் துவங்கவில்லை. கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன், கடந்த, 14ல், மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. வார விடுமுறையின்றி, தொடர்ச்சியாக, அடுத்த மாதம் முதல் தேதி வரை கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், பார்லிமென்டுக்கு வந்த சில எம்.பி.,க்கள் மற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், எம்.பி.,க்களிடையே பீதி ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத் தொடரை முன் கூட்டியே முடிப்பது குறித்து, லோக்சபா உயர்மட்ட அலுவல் கூட்டத்தை கூட்டி, சபாநாயகர் ஓம் பிர்லா, சமீபத்தில் விவாதித்தார்.
இந்நிலையில் ராஜ்யசபாவில் பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் ராஜ்யசபாவில் கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க பரிந்துரை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள், இந்த அவையில் அதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
AthibAn Tv