நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நில அபகரிப்பு புகாரில் சென்னையில் கைது.
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் கீழையூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். தாமஸ் ஆல்வா எடிசன் மீது மீது நாகை அதிமுக நகர செயலாளர் தங்க.கதிரவன் சில தினங்களுக்கு முன்பு நாகை நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார்.
புகாரில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருள்மிகு ரஜதகிரீஸ்வரர் திருக்கோயில், புனித வேளாங்கண்ணி திருத்தல பேராலயம், அரசு புறம்போக்கு, சுனாமி குடியிருப்பு ஆகியவற்றுக்குச் சொந்தமான சொத்துக்களை போலி ஆவணங்கள் தயார் செய்து தாமஸ் ஆல்வா எடிசன் அபகரித்து உள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, தாமஸ் ஆல்வா எடிசன் மீது, நில அபகரிப்பு போலிசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்கி இருந்த தாமஸ் ஆல்வா எடிசனை நாகை நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அதிமுகவை சேர்ந்த வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த 7 பேர் மீது திமுக சார்பாக நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதால் நாகை எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
AthibAn Tv