ரஷ்யாவில் நடைபெற உள்ள போர் பயிற்சியில் சீனா, பாக்., பங்கேற்பதால் அந்நிகழ்ச்சியில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது.
ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியை சேர்ந்த அஸ்ட்ராகான் பிராந்தியத்தில் பல நாடுகள் பங்கேற்கும் காவ்காஸ் 2020 என்ற போர் பயிற்சி நடைபெற உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை சேர்ந்த மற்றும் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த குறைந்தது 19 நாடுகளை சேர்ந்த13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். கடந்த 2001 ம் ஆண்டில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் முயற்சியால் இந்த போர் பயிற்சி உருவாக்கப்பட்டது.வரும் 15 ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் போர் பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த போர்பயிற்சியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வகையில் சுமார் 200 ராணுவ வீரர்கள் மற்றும் துருப்புகளை அனுப்பி வைப்பது என பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் , ராணுவ ஊழியர்களின் தலைவர் பிபின்ராவத், ராணுவதளபதி எம்.எம்.நாரவனே ஆகியோர்கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே சீனா, பாக். ஆகிய நாடுகளும் இந்த பயிற்சியில் பங்கு பெற உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன படைகளுடன் நிகழ்ந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதே நேரத்தில் சீன தரப்பில் பலியானவர்களின் விபரம் இ து நாள் வரையில் தகவல்தெரிவிக்கப்படவில்லை. மேலும் பாகிஸ்தான் நடத்தி வரும் எல்லை தாண்டிய தாக்குதல் போன்றவை காரணமாக இந்த போர் பயிற்சியில் இந்தியா கலந்து கொள்வது குறித்து பல்வேறுதரப்பினரிடம் எதிர்ப்பு வந்தது.
இதனையடுத்து பாதுகாப்புதுறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக , போர் பயிற்சியில் பங்கேற்பதில் இருந்து இந்தியா விலக முடிவு செய்துள்ளது என ரஷ்யாவுக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக கூறினார்.மேலும்சீனா, பாக்., இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சிக்கலும் பயிற்சி விலகலுக்கு முக்கிய காரணம் என கூறினார்.
பல முறை அரசு முறையாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும் கிழக்கு லடாக்கில் எந்த மாற்றமும் இல்லை"தவுலத் பேக் ஓல்டி (டிபிஓ) யில் ராணுவத்தை குறைப்பதில் சீனா இதுவரை அக்கறையற்றதாகவே இருந்து வருகிறது.அதற்கு பதிலாக, தனது ராணுவ உள்கட்டமைப்பை கட்டுப்பாட்டு வரிசையில் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. என்று அதிகாரி கூறினார்.
இதனிடையே ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் ஷாங்காய்ஒத்துழைப்புஅமைப்பு நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது.இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொள்கிறார். அதே போல் சீனாவும் கூட்டத்தில் பங்கேற்கிறது. இருப்பினும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து கொள்ள வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் வரும் 10 ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது.இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கலந்து கொள்கிறார்
AthibAn Tv