சமீபத்தில், பிரதமர் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சீன பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. சோனியா, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 'சீன விவகாரத்தில் பிரதமர் எடுக்கும் முடிவுகளுக்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும்' என, ஸ்டாலின் பேசினார். ஆனால், இதே கூட்டத்தில் பேசிய சோனியா, மத்திய அரசை விமர்சித்தார்.
மோடிக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசியது, காங்கிரசில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராகுல், மிகவும் கோபப்பட்டாராம். 'தினமும் நான் மோடியை விமர்சித்து வருகிறேன். ஆனால், நம் தமிழக கூட்டணி தலைவர் ஸ்டாலின் எதற்கு இப்படி ஆதரவாக பேச வேண்டும்?' என கேட்டாராம். காங்கிரசின் கோபம், தி.மு.க.,விற்கு தெரிவிக்கப்பட்டதாம்.
'ராணுவம், சர்வதேச விவகாரங்களில் மத்திய அரசை ஆதரிக்க வேண்டும் என்பது இப்போது எடுத்த முடிவு அல்ல; தி.மு.க.,வின் தலைவராக அண்ணாதுரை இருந்த காலத்தில் இருந்து, கருணாநிதி வரை இது தான் கட்சியின் நிலை. 'இலங்கை விவகாரம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. எனவே, எங்கள் கொள்கையில் மாற்றம் இல்லை' என, தி.மு.க.,வின் சீனியர் தலைவர்கள், காங்., தரப்புக்கு பதில் சொன்னார்களாம்.
'ராகுல் பேச்சை, அவர் கட்சி தலைவர்களே கேட்பதில்லை; நாங்கள் எதற்கு கேட்க வேண்டும்?' என கிண்டலடிக்கின்றனர், தி.மு.க., சீனியர்கள் சிலர்.
AthibAn Tv