
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் (ஓ.ஐ.சி) கூட்டத்தில் இஸ்லாமியப் போபியாவை வைத்து இந்தியாவை தனிமைப்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை மாலத்தீவுகள் தடுத்து நிறுத்தி, இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளது.
57 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த ஓஐசி அமைப்பின் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. அதில், இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மதரீதியாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. இந்தியா மீது வீண் பழிசுமத்த முடியாது என்றும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் மாலத்தீவு அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் நியூயார்க்கில் உள்ள மாலத்தீவின் நிரந்தர பிரதிநிதி தூதர் தில்மீசா உசேன் பேசியதாவது: இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவை குறி வைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் மாலத்தீவு ஆதரிக்காது.
வெறுப்பு, பாரபட்சம் மற்றும் இனவெறி கலாச்சாரத்தில் உலகம் ஆபத்தான நிலையை கொண்டுள்ளது. அரசியல் மற்றும் பிற சித்தாந்தங்கள், நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிப்பதற்கான ஒரு கருவியாக வன்முறை பயன்படுத்தப்படுகிறது. அரசியல் அல்லது வேறு எதையும் ஊக்குவிப்பதற்காக இஸ்லாமியப் போபியா, இனவெறி அல்லது எந்தவொரு வன்முறையும் உட்பட உலகில் எங்கும் மாலத்தீவுகள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியாக நிற்கின்றன.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிவைப்பது உண்மையான பிரச்னையைத் தவிர்ப்பது போன்றதாகும். இதன் மூலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் பன்முக கலாச்சார சமூகம் மற்றும் 200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் இந்தியாவை தனிமைப்படுத்துவது உண்மையில் தவறானது என்று குற்றம் சாட்டுகிறேன்.
இது தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். இஸ்லாம் மதம் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உள்ளது. இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 14.2 சதவீதம் கொண்ட இரண்டாவது பெரிய மதமாகும். சிலரின் தவறான அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல் பிரச்சாரங்கள் 1.3 பில்லியன் உணர்வுகளின் பிரதிநிதியாக கருதப்படக்கூடாது. எனவே, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்குள் இது போன்ற எந்தவொரு செயலையும் மாலத்தீவு ஆதரிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.