சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கக் கூடாது எனவும் அங்கு கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் எனவும் முதல்வர் இபிஎஸ் உடனான ஆலோசனை கூட்டத்தின் முடிவில் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
நாளையுடன் (மே 31) 4ம் கட்ட ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் முதல்வர் இபிஎஸ்., உடன் மருத்துவ நிபுணர்கள் குழு 5வது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வைரஸ் குறித்தான ஆய்வுகளில் புது புது முடிவுகள் வருகின்றன. அடுத்த மாதம் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நகரங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்தியாவில் 70 சதவீத தொற்று 30 நகரங்களில் தான் உள்ளது. சென்னை மெட்ரோபாலிட்டன் சிட்டி என்பதால் சென்னை மற்றும் அதனை ஒட்டிய நகரங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.
சோதனைகள் அதிகரிக்கப்படுவதால் பாதிப்பு அதிகரிக்கிறது; இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். இறப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது. படுக்கை வசதிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் அதிகம் இருந்தாலும் சிகிச்சை அளிக்க முடியும். சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
அதன் மூலம் பாதித்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். வைரசை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. அனைவரும், அனைத்து நேரத்திலும் மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கவனமாக இருக்க வேண்டும். இந்த 4 மாவட்டங்களில் கட்டுப்பாடு தொடர வேண்டும். தளர்வு அளிக்க கூடாது. மற்ற மாவட்டங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப தளர்வு அளிக்கலாம்.
கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எண்ணிக்கை அதிகரித்தது எதிர்பார்த்ததுதான். உடம்பு சரியில்லாத போது வெளியில் செல்வதை தவிர்த்து, டாக்டரை உடனடியாக அணுக வேண்டும். வீட்டில் உள்ள முதியவர்கள், நோயுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் முதியவர்களை பாதுகாப்பது அவசியம். இதன் மூலம் இறப்பு வகிதத்தை தவிர்க்கலாம். ஊடகங்கள் பயத்தை உண்டாக்காமல் சமூக பொறுப்பை வெளிக்கொண்டு வரவேண்டும். ரயில், பஸ், மெட்ரோ, திருமண மண்டபங்கள், கோயில் திறப்பு போன்ற தளர்வுகளை அளிக்கும் போது உயிரிழப்பு அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
AthibAn Tv