அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, இருவரும் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இந்த சம்மனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனிடையே, மதுக்கொள்கை மீறல் வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாதம் 21ம் தேதி இரவு கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி காட்சி மூலம் அவர் இன்று திகார் சிறையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால், அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்க அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதன்படி கெஜ்ரிவாலுக்கு மே 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரது நீதிமன்ற காவலை மே 7ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
AthibAn Tv