இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள டெர்னேட் பகுதியில் இருந்து சுலாப்ஸ் தீவில் உள்ள சனானா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று சிறிய கப்பல் புறப்பட்டுச் சென்றது. ஆனால் புறப்பட்ட சென்ற சிறிது நேரத்தில் இந்த கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கப்பலில் தீப்பிடித்ததால் பயணிகள், பணியாளர்கள் பெருரம் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அலறினர். இதனிடையே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்த பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பயணிகளை லைப் ஜாக்கெட்டுகள் அணிய வைத்து கடலில் குதிக்க வைத்தனர்.
அவர்கள் கடலில் குதித்ததும் கீழே காத்திருந்த குழுவினர் உயிர்காக்கும் படகுகளில் ஏற்றி அழைத்துச்சென்றனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இவ்வாறு 274 பயணிகள் காயம் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், ஒருவரை மட்டும் காணவில்லை என்றும் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மீட்பு பணியின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. கப்பலின் ஒரு பகுதி தீப்பற்றி எரியும் நிலையில், கப்பலில் இருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் கடலில் குதிக்கும் காட்சி அதில் பதிவாகி உள்ளது. கப்பலை சுற்றி தயார் நிலையில் உள்ள மீட்பு குழுவினர், பயணிகளை ரப்பர் படகுகளில் ஏற்றும் காட்சியும் பதிவாகி உள்ளது.
AthibAn Tv