டில்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் கலைந்து செல்லுமாறு கல் மற்றும் கம்புகளை வீசினர். இதனை தொடர்ந்து இருதரப்பினர் மோதல் நடக்காமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். மேலும் போலீசாருடனும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 போலீசா் காயமுற்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியின் சிங்கு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26-ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது.
இந்நிலையில், சிங்கு பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டு தேசியக் கொடியுடன் ஊர்வலமாக வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக உள்ளூர் மக்கள் நடமாட இடையூறு ஏற்படுவதுடன் அப்பகுதி கடைகளில் விற்பனை பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
சிங்கு பகுதியை விட்டு விவசாயிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டபடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரின் தடுப்பையும் மீறி, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகளை நோக்கி கம்பு, கற்களை வீசி விவசாயிகளை விரட்டியடிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சிங்கு பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கு பகுதி மக்களை கலைந்து செல்லுமாறு தடியடி நடத்தி விரட்டினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் ஏராளமானோர் போராட்டத்தை தொடரும் நிலையில், அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஒரு சிலர் கத்தியால் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
AthibAn Tv