காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிரினல் பாண்டே, ஜாபர் அஹா, பரேஷ் நாத், ஆனந்த் நாத், வினோத் கே ஜோஷ் ஆகியோர் மீது போலீசார் தேச துரோக பிரிவு, சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணி வன்முறை வெடித்தது. அதில், விவசாயி ஒருவர் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தார். ஆனால், போலீசார் சுட்டதில் விவசாயி உயிரிழந்ததாக என்ற தவறாக வெளியான தகவலை, சசிதரூர் மற்றும் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவு செய்தனர்.
ஆனால், டிராக்டர் பேரணியின் போது டில்லி போலீசார் ஒரு துப்பாக்கி குண்டை கூட சுடவில்லை. விவசாயி டிராக்டர் கவிழ்ந்தே உயிரிழந்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கமளித்து, அது குறித்த வீடியோவையும் வெளியிட்டனர். அந்த வீடியோவில், விவசாயிகள் சென்ற டிராக்டர் போலீசாரின் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில், விவசாயி உயிரிழந்த காட்சிகள் பதிவாகியது. உயிரிழந்த விவசாயி பிரேத பரிசோதனையின் போதும், உடலில் எந்தவித துப்பாக்கி குண்டு காயம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, நொய்டாவை சேர்ந்த அர்பித் மிஸ்ரா என்பவர், நொய்டா போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில் ‛‛ குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் போராட்டக்காரர் ஒருவர் மரணம் தொடர்பாக தவறான செய்தியை டுவீட் செய்த சசிதரூர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய், மிரினல் பாண்டே, ஜாபர் அஹா, பரேஷ் நாத், ஆனந்த் நாத், வினோத் கே ஜோஷ் ஆகியோர் மீது, ஐபிசி சட்டப்பிரிவு 153ஏ, 153பி, 295ஏ, 29, 504, 505(2). 124ஏ(தேச துரோகவழக்கு) 34, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 66வது பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவை ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகள் ஆகும்.
ம.பி., மாநிலம் போபாலின் கவுசல் நகரை சேர்ந்த சஞ்சய் ரகுவன்ஷி என்ற விவசாயி அளித்த புகாரில், கடந்த 26ம் தேதி டிராக்டர் பேரணியில் தொடர்பாக, சசிதரூர் உள்ளிட்டோர் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தும் வகையில் செய்தி வெளியிட்டனர். இது டில்லி மற்றும் நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் தவிர்த்து, மிரினால் பாண்டே, ஜபர் அகா, பரேஷ் நாத், ஆனந்த் நாத் மற்றும் வினோத் கே ஜோஷ் ஆகியோர் மீது ஐபிசி 153 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
AthibAn Tv