சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டல (சிபிஇசி) திட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) நிகழ்ச்சி நிரல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமாதான பாலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்றும் அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டல (சிபிஇசி) திட்டம் இருக்க வேண்டும். காஷ்மீரின் எதிர்காலம் சிபிஇசியுடன் சேர்க்கப்படுவது முக்கியம். ஏனென்றால் 1947-க்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் இந்த வர்த்தக அரங்கின் ஒரு பகுதியாக இருந்தது.
எங்கள் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) நிகழ்ச்சி நிரல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமாதான பாலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று மெஹபூபா முப்தி தெரிவித்தார். மெஹபூபா முப்தி பாகிஸ்தான், சீனாவுக்கு ஆதரவாக சர்ச்சை பேச்சு கூறுவது இது முதன்முறை அல்ல.
காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதால்,அங்கு அமைதியைக் கொண்டுவர பாகிஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசியல் அமைப்புகளின் உரையாடல் முக்கியமானது என்று அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தானில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தை(சிபிஇசி) சீனா அமைத்து வருகிறது.
இது பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தையும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைக்கிறது. இந்த பொருளாதார மண்டலமானது, இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி வழியாக செல்கிறது. எனவே இந்தத் திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் சீனா இந்த திட்டத்தை செய்யலப்படுத்தி வருகிறது.
AthibAn Tv