சட்டசபையில், பா.ஜ.க அமர்வது நிச்சயம் என அக்கட்சி மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் தான் கூட்டணி அமையும் என அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் நிரூபர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், கூட்டணிக்கு அ.தி.மு.க., தான் தலைமை வகிக்கும் என தெரிவித்தார்.
இதனிடையே, தமிழக பா.ஜ.கவின் கல்வியாளர்கள் பிரிவின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம், கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது.
அந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் பேசும் போது, வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற்றக்கூடியதாக தேசிய கல்விக்கொள்கை உள்ளது. அண்டை மாநிலங்களில் மும்மொழி கொள்கை உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் மற்றொரு மொழி கற்பிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இன்னொரு மொழி படிப்பதில் என்ன தவறு உள்ளது. அதனை அரசியலாக்குகின்றனர். இன்னொரு மொழி தெரியாமல் நான் கஷ்டப்பட்டிருக்கிறேன். வரும் காலம் பா.ஜ., கட்சியின் காலம். இது வெகு தூரத்தில் இல்லை. நாம் சட்டசபையில் அமர்வது நிச்சயம். நமது எம்.எல்.ஏ.,க்கள் கோட்டையை அலங்கரிப்பார்கள். அதுவரை எனக்கு ஓய்வில்லை என பேசினார்.
இதனிடையே, தமிழகத்தில் பா.ஜ.கவின் கூட்டணியின்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற எச்.ராஜாவின் கருத்து தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் நிருபர்களிடம் கூறுகையில், கட்சி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறுகின்றனர். பா.ஜ.க டில்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் ஏதேனும் ஒரு திராவிட கட்சியில் தான் சவாரி செய்ய முடியும். தமிழகத்தில் அக்கட்சி இன்னும் வளர வேண்டும். என தெரிவித்தார்.
AthibAn Tv