தொழிலதிபர்களின் வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா என்பது ஏட்டு சுரைக்காய் விவாதம் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி வெளியிட்ட வங்கி கடன் மோசடி பட்டியலில் நிரவ் மோடி, விஜய் மல்லையா, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், மெகுல் சோக்சி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருந்தது. இவர்களது ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.
இதனை பார்லி.,யில் வெளியிட தயங்கியது ஏன் எனவும், அந்த பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாஜ.,வின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளதால் தான் இவ்விவகாரம் மறைக்கப்பட்டிருக்கிறது எனவும் காங்., எம்பி ராகுல் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமாக பதிலடி அளித்திருந்தார். மேலும், வாராக்கடன் என்பது வேறு, கடனை கழித்து கணக்கு வைத்திருப்பது என்பது வேறு. இது குறித்து ராகுல், ப.சிதம்பரத்திடம் டியூசன் கற்க வேண்டுமென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவுறுத்தி இருந்தார்.
இது தொடர்பாக மூத்த காங்.,தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ரூ .68,000 கோடி வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா. இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு. ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வாராக் கடன் தொகைகளை 'வாராக் கடன்' என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
AthibAn Tv