
'லடாக் மோதலில் சீன வீரர்கள் 43 பேர் இறந்ததாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய்; எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை' என சீனா மறுப்பு தெரிவித்தது.
கடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம், உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தற்போது அதனை மறுத்துள்ளது.
இந்திய - சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் நேற்று கூறியதாவது: இரு நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்த விஷயத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, இரு தரப்பும் உறுதி அளித்துள்ளன. தற்போது இதை மட்டுமே கூற விரும்புகிறேன்.
இரு தரப்பு பேச்சில், படைகளை விலக்குவது பற்றி முடிவு எடுக்கப்பட்டதா என்பது பற்றி தற்போது தெரிவிக்க முடியாது. துாதரக மற்றும் ராணுவ அதிகாரிகள் அளவில் தொடர்ந்து பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்வான் பகுதியில் நடந்த மோதலின் போது, சீன வீரர்கள், 40 பேர் உயிரிழந்ததாக தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஊடகங்களில் தான் இதுபோன்ற செய்திகள் வெளியாகின்றன.
இந்த மோதலில் சீன வீரர்கள் யாரும் இறக்கவில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.